அரசியல்

மீண்டும் N.D.A கூட்டணியில் அதிமுக- பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த இபிஎஸ்

குடும்ப அரசியல், ஊழல் மற்றும் தவறான நிர்வாகம் இல்லாத ஒரு சிறந்த தமிழ்நாட்டைக் கட்டியெழுப்ப நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.

மீண்டும் N.D.A கூட்டணியில் அதிமுக- பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த இபிஎஸ்
தமிழகத்தில் என்.டி.ஏ கூட்டணி ஆட்சி

சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி சோழா ஹோட்டலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் நேற்று செய்தியாளர்களை கூட்டாக சந்தித்தனர். அப்போது பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “தமிழ்நாட்டில் NDA கூட்டணி அதிமுக தலைமையில் தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளது.2026 சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெறும்.

ஜெயலலிதா இருந்த காலம் முதலே அதிமுகவுடன் இணைந்து பாஜக பயணித்து வருகிறது. தேசிய அளவில் மோடி தலைமையிலும், மாநில அளவில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் தேர்தலை சந்திக்க உள்ளோம். 1998 முதல் அதிமுகவுடன் பாஜக தொடர்ந்து கூட்டணி அமைத்து வருகிறது. பாஜக –அதிமுக கூட்டணி 30 இடங்களை கைப்பற்றிய காலம் உண்டு. 2026 சட்டமன்றத் தேர்தலில் என்.டி.ஏ கூட்டணி ஆட்சியை அமைக்க போகிறது. எடப்பாடி தலைமையில் தான் கூட்டணி அமையப்போகிறது.

பிரதமர் மோடிக்கு நன்றி

மேலும், அதிமுகவின் தனிப்பட்ட கட்சி விவகாரங்களில் பாஜக பங்கேற்காது, தேர்தல் விவகாரத்தில் மட்டுமே பங்கேற்போம். ஓபிஎஸ், சசிகலா விவகாரம் அதிமுகவின் தனிப்பட்ட விவகாரம் ஆகையால், அதில் தலையிட நாங்கள் விரும்பவில்லை.

சனாதனம், தொகுதி மறுவரையறை கொள்கை போன்ற பல்வேறு பிரச்சனைகளை திமுக எழுப்பிக் கொண்டிருக்கிறது. திமுகவின் ஊழல்களை மறைக்க இதுபோன்ற பிரச்சனைகளை எழுப்பி வருகின்றன. அதிமுக எந்தவிதமான நிபந்தனையும் வைக்கவில்லை. இது இயல்பாக அமைந்த கூட்டணி. இந்த கூட்டணி இரண்டு கட்சிகளுக்கும் பலனளிக்கக் கூடியது என தெரிவித்தார்.
இதனால் தமிழகத்தில் 2026ல் அதிமுக பாஜக இடையே கூட்டணி உறுதியாகியுள்ளது. இந்த நிலையில், என்.டி.ஏ கூட்டணியில் மீண்டும் இணைந்து பணியாற்றுவது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

தொலைநோக்கு பார்வை

இதுகுறித்து இபிஎஸ் தனது எக்ஸ் தளப்பக்கத்தில், “ பிரதமர் நரேந்திர மோடியின் அசைக்க முடியாத ஆதரவிற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதிமுக தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் கூட்டணி அமைத்துக் கொள்வதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். தமிழ்நாட்டின் முன்னேற்றம் மற்றும் செழிப்புக்கான பொதுவான தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கூட்டணி இது. இந்த முக்கியமான தருணத்தில், பிரதமரின் தொலைநோக்குப் பார்வையுடன், மக்களின் எண்ணங்களை நனவாக்குவதற்கும், அவர்களின் மாற்றத்திற்கான தொலைநோக்குப் பார்வைக்கு பங்களிப்பதற்கும் அதிமுக NDA கூட்டணிக் கட்சிகளுடன் நெருக்கமாகப் பணியாற்றும்.

குடும்ப அரசியல், ஊழல் மற்றும் தவறான நிர்வாகம் இல்லாத ஒரு சிறந்த தமிழ்நாட்டைக் கட்டியெழுப்ப நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். தமிழக மக்கள் வெளிப்படையான, வளர்ச்சியை மையமாகக் கொண்ட அரசாங்கத்திற்கு தகுதியானவர்கள் - மேலும் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் அதை வழங்க நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.