தமிழ்நாடு

கடன் தொல்லையால் நேர்ந்த சோகம்.. மனைவி, மகன்களை கொன்று தொழிலதிபர் தற்கொலை!

சென்னை நீலாங்கரையில் கடன் தொல்லையால் தொழிலதிபர் ஒருவர் தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களைக் கொலை செய்துவிட்டுத் தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடன் தொல்லையால் நேர்ந்த சோகம்.. மனைவி, மகன்களை கொன்று தொழிலதிபர் தற்கொலை!
Businessman commits suicide after killing wife and sons
சென்னை நீலாங்கரை பகுதியில் கடன் தொல்லை காரணமாகத் தொழிலதிபர் ஒருவர் தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களைக் கொலை செய்துவிட்டுத் தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தின் பின்னணி

சென்னை மவுண்ட் ரோட்டில் சிசிடிவி கேமரா விற்பனை செய்யும் தொழில் நடத்தி வந்தவர் சிரஞ்சீவி தாமோதர குப்தா (45). இவர் நீலாங்கரையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இவருக்கு ரேவதி (36) என்ற மனைவியும், ரித்விக் (15), திக்சித் அஷ்வா (11) ஆகிய இரண்டு மகன்களும் இருந்தனர்.

இன்று அதிகாலையில் சிரஞ்சீவி தனது மாமா உட்பட நான்கு நபர்களுக்கு நான்கு லட்சம் ரூபாய் பணத்தை அனுப்பியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த அவரது மாமா போன் செய்தபோது சிரஞ்சீவி எடுக்கவில்லை. இதைத் தொடர்ந்து, சாலிகிராமத்தில் உள்ள உறவினர் சிரஞ்சீவி வீட்டிற்கு வந்து பார்த்தபோது இந்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

குடும்பத்துடன் விபரீத முடிவு

வீட்டிற்கு வந்த உறவினர் பார்த்தபோது, சிரஞ்சீவி தாமோதர குப்தா பாத்ரூமில் கத்தியால் கழுத்தை அறுத்துக் கொண்டிருந்தார். அவரைத் தடுக்க உறவினர் முற்பட்டபோது, சிரஞ்சீவி பாத்ரூம் கதவை உடனடியாக மூடிக்கொண்டார். பின்னர் அருகில் இருந்தவர்களின் உதவியுடன் கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, சிரஞ்சீவி கழுத்தை அறுத்துத் தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்தது.

மேலும், அவரது மனைவி ரேவதி மற்றும் இரண்டு மகன்களும் படுக்கை அறையில் பாலிதீன் கவரால் சுற்றப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.

கடிதமும் விசாரணையும்

இது குறித்துத் தகவல் அறிந்த நீலாங்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நான்கு பேரின் உடல்களையும் மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில், சிசிடிவி கேமரா தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகக் பல கோடி ரூபாய் கடன் வாங்கி சிரஞ்சீவி சிரமப்பட்டு வந்தது தெரிய வந்துள்ளது.

போலீசார் அவரது வீட்டில் சோதனை செய்தபோது, அங்குக் கடிதம் ஒன்றும் சிக்கியது. அந்தக் கடிதத்தில், "தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் கடன் பெற்று, அதைத் திருப்பிச் செலுத்த முடியாததால் குடும்பத்துடன் உயிரை மாய்த்துக்கொண்டோம். எங்களது மரணத்திற்கு யாரும் காரணமில்லை" என்று சிரஞ்சீவி மற்றும் அவரது மனைவி ஆகியோரின் கையெழுத்துடன் இருந்ததாகக் கூறப்படுகிறது.

தொடரும் விசாரணை

உறவினர்களுக்குக் கடைசியில் நான்கு லட்சம் ரூபாயை ஆன்லைன் மூலம் ஏன் அனுப்பினார், மொத்தக் கடன் தொகை எவ்வளவு உள்ளிட்ட பல கோணங்களில் நீலாங்கரை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த மார்ச் மாதம் திருமங்கலத்தில் மருத்துவர் ஒருவர் கடன் தொல்லை காரணமாகக் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்ட நிலையில், மீண்டும் ஒரு தொழிலதிபர் குடும்பத்துடன் உயிரை மாய்த்துள்ள சம்பவம் சென்னையில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.