தமிழ்நாடு

ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை.. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3,600 அதிகரிப்பு!

தங்கத்தின் விலை காலை, மாலை என இரு முறை உயர்ந்துள்ளது. மாலையில் சவரனுக்கு ரூ,2,320 உயர்ந்து வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்துள்ளது.

ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை.. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3,600 அதிகரிப்பு!
Gold Rate
தமிழகத்தில் தங்கம் மற்றும் வெள்ளி விலை இன்று இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் ஏற்றத்தைச் சந்தித்துள்ளது. காலையில் ஒரு புதிய உச்சத்தைத் தொட்ட தங்கம், மாலையில் மேலும் ஒரு அதிரடி உயர்வைச் சந்தித்து சாமானிய மக்களை நிலைகுலைய வைத்துள்ளது.

ஒரே நாளில் இருமுறை விலை உயர்வு

சர்வதேச சந்தையில் நிலவும் அசாதாரணமான சூழல் காரணமாக, இன்று காலையிலேயே தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்ந்தது. இதனால் சவரன் ரூ. 1,08,880-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால், இது ஒரு ஆரம்பம் மட்டுமே என்பது போல, மாலை நேரத்தில் மீண்டும் ஒரு அதிரடி உயர்வு ஏற்பட்டது. மாலையில் மட்டும் சவரனுக்கு மேலும் ரூ. 2,320 உயர்ந்தது. ஒட்டுமொத்தமாக இன்று ஒரே நாளில் மட்டும் தங்கம் சவரனுக்கு ரூ. 3,600 உயர்ந்துள்ளது.

சவரன் ரூ. 1.11 லட்சத்தை எட்டியது

வரலாற்றில் முதல் முறையாக ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ. 1,11,200 என்ற இமாலய விலையை எட்டியுள்ளது. அதேபோல், ஒரு கிராம் தங்கத்தின் விலை மாலையில் மேலும் அதிகரித்து ரூ. 13,900 என்ற நிலையை நெருங்கியுள்ளது. கடந்த சில மாதங்களாகவே ஒரு லட்சம் ரூபாயைத் தாண்டி விற்பனையாகி வந்த தங்கம், இன்று ஒரே நாளில் அடுத்தடுத்த மைல்கற்களைக் கடந்து புதிய உச்சத்தைப் பதிவு செய்துள்ளது.

வெள்ளி விலையிலும் அதிரடி மாற்றம்

தங்கத்தின் விலையோடு போட்டியிடும் வகையில் வெள்ளி விலையும் இன்று கட்டுக்கடங்காமல் உயர்ந்தது. காலையில் கிராமுக்கு ரூ. 12 உயர்ந்த நிலையில், மாலையில் மேலும் ரூ. 10 அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ. 340-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று ஒரே நாளில் ரூ. 22,000 உயர்ந்து, ரூ. 3,40,000 என்ற புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்

தங்கத்தின் விலை உயர்வு இன்று ஒரு கட்டுக்கடங்காத நிலையில் இருப்பதால், நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் குறைவாகவே காணப்படுகிறது. குறிப்பாகத் திருமண சீசன் நெருங்கும் வேளையில், ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 3,600 வரை உயர்ந்துள்ளது நடுத்தர வர்க்கத்தினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு இத்துடன் நிற்குமா அல்லது நாளை மீண்டும் அதிகரிக்குமா என்ற அச்சம் நகைப்பிரியர்களிடையே ஏற்பட்டுள்ளது.