தவெகவில் இன்று இணைந்த ஓய்வு பெற்ற ஐஆர்எஸ் அதிகாரியான அருண் ராஜிற்கு அந்த கட்சியில் கொள்கை பரப்பு பொதுச் செயலாளராக பொறுப்பு வழங்கட்டுள்ளது. இந்த நிலையில் அருண் ராஜ் சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலுக்கு வந்தார். அங்கு பெரியாரின் நினைவிடத்திற்கு மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினார்.
நல்ல எதிர்காலத்தை அமைத்து கொடுப்போம்
இதையடுத்து அருண் ராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். இன்று கட்சியில் இணைந்த பிறகு எங்களின் கட்சியின் கொள்கை தலைவரான பெரியாருக்கு நேரில் வந்து மரியாதை செலுத்தி உள்ளேன். கொள்கைப் பிடிப்பு தான் எங்கள் கட்சியின் அடித்தளம். தமிழ்நாட்டிற்கான நல்ல எதிர்காலத்தை அமைத்து கொடுப்போம்.
நீண்ட காலமாக அரசியல் கட்சியில் சேர எண்ணம் இருந்தது. முழுவிருப்பத்தின் அடிப்படையிலேயே தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்ந்துள்ளேன். இன்னும் எனக்கு 15 ஆண்டுகள் மத்திய அரசு பணிக்கான சர்வீஸ் இருக்கிறது. நல்ல பணி செய்யும் படி தலைவர் விஜய் அறிவுறுத்தி உள்ளார்" என்று அருண் ராஜ் தெரிவித்துள்ளார்.
தவெகவில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏக்கள்
முன்னதாக பனையூரில் தவெக தலைமை அலுவலகத்திற்கு வந்த அருண் ராஜியை அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்தன் கையைப்பிடித்து வரவேற்றார். மேலும் தவெகவில் புதிதாக 6 பேர் இன்று இணைந்துள்ளதாக தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார். முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி உள்பட 6 பேர் இன்று தவெகவில் இணைந்துள்ளனர். குறிப்பாக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஆர். ராஜலட்சுமி, திமுக முன்னாள் எம்.எல்.ஏ டேவிட் செல்வன், திமுமக நிறுவனர் , அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ டாக்டர் ஸ்ரீதரன், மரிய வில்சன், முன்னாள் நீதிபதி சுபாஷ் ஆகியோர் இணைந்துள்ளனர்.