அரசியல்

பாஞ்சாலங்குறிச்சியில் துரை வைகோ கெத்து.. செண்டிமெண்ட் சிக்கலில் மதிமுக?

கட்டபொம்மன் கோட்டைக்குப் போனால் பதவிக்கு ஆபத்து என்கிற சென்டிமென்டை உடைத்து கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து கெத்து காட்டிய மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியிருப்பது தான் பாஞ்சாலங்குறிச்சியின் பஞ்சாயத்தாக உள்ளது.

பாஞ்சாலங்குறிச்சியில் துரை வைகோ கெத்து.. செண்டிமெண்ட் சிக்கலில் மதிமுக?
மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ
ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் போராடிய வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு பாஞ்சாலங்குறிச்சியில் வீரசக்க தேவி கோயிலுடன் கோட்டை உள்ளது. அந்த கோட்டைக்கு வந்து கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்தால் பதவி பறிபோகும் என்கிற சென்டிமென்டைதான் அடித்து உடைத்திருக்கிறார் துரை வைகோ. வளர்ந்து வரும் இளம் தலைவரான துரை வைகோவுக்கு இது தேவையா? என ம.தி.மு.கவில் இருக்கும் பெரும்பாலான நிர்வாகிகள் பேசிக்கொள்கிறார்கள். அப்பாவைப் போல மகனும் கொள்கையில் உறுதியாக இருக்கிறார் என்று இன்னொரு தரப்பினரும் பேசுகிறார்கள்.

இதுபற்றி ம.தி.மு.கவினரிடம் பேசினோம். "கட்டபொம்மன் கோட்டை கட்டி வாழ்ந்த பாஞ்சாலங்குறிச்சி அரண்மனை ஆங்கிலேயர்களால் தகர்க்கப்பட்ட பிறகு, அரண்மனை இருந்த இடம் புல் பூண்டு முளைக்காத தரிசு நிலமாகவே கிடந்தது. 1974ம் ஆண்டு முதலமைச்சராக இருந்த கருணாநிதி, பாஞ் சாலங்குறிச்சியில் கட்டபொம்மன் அரண்மனை இருந்த இடத்தில் கோட்டை கட்டி கட்டபொம்மன் சிலையையும் திறந்து வைத்தார்.

அடுத்து நடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க படுதோல்வியை சந்தித்தது. அதற்குப் பின் பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன் சிலைக்கு மாலை போட்ட சில தலைவர்களின் பதவியும் பறிபோனது. அதைத் தொடர்ந்து பாஞ் சாலங்குறிச்சி போனால் பதவி தப்பாது என்கிற சென்டிமென்ட் தலைவர்கள் மத்தியில் ஆழமாய் பதிந்துவிட்டது.

வருடா வருடம் மே மாதம் மூன்று நாட்கள் கோட்டையில் இருக்கும் வீரசக்க தேவி ஆலயத்தில் உற்சவ திருவிழா நடைபெறும். அந்த திருவிழாவில் தமிழகம் முழுவதும் இருந்து நாயக்கர் சமுதாயத்தினர் ஆயிரக் கணக்கில் கலந்து கொள்வார்கள். விழாவின் கடைசி நாளில் அரசு சார்பில் நிகழ்ச்சியும் கலை நிகழ்ச்சியும் நடைபெறும். " அந்த நிகழ்ச்சிக்கு அரசியல் தலைவர்களை அழைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் வீர சக்கதேவி ஆலயக் குழுவினர்.

ஆனால், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எந்த ஒரு அமைச்சரும் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்து விடுவார்கள். நாயுடு சமுதாயத்தைச் சேர்ந்த கடம்பூர் ராஜு 10 வருடங்கள் அமைச்சராக இருந்தார். கயத்தாறில் இருக்கும் கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவிக்கும் அவர் பாஞ்சாலங்குறிச்சி பக்கம் தலைவைத்து கூட படுப்பதில்லை. இந்த சென்டிமென்டுகளை எல்லாம் பார்க்காமல் யாராவது ஒருவர் கோட்டைக்கு வந்து சென்றால் அது பெரிதாக பேசப்படும்.

இந்த நிலையில் சில நாட்கள் முன்பு நடந்த வீரசக்கதேவி ஆலய உற்சவ திருவிழாவில் கலந்துகொண்டார் ம.தி.மு.க முதன்மைச் செயலாளர் துரை வைகோ. வீரசக்க தேவி ஆலயத்தில் பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்த அவர், கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்தார். அதைத் தொடர்ந்து அங்கு நடந்த கலை நிகழ்ச்சி மேடையில் பேசிய துரை வைகோ, 'பாஞ்சாலங்குறிச்சி கோட்டைக்கு வந்து கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினால் பதவி போய்விடும் என்று சொல்வதெல்லாம் மூட நம்பிக்கை என்றார். மேலும், இங்கே வந்தால் பதவி போய்விடும் என்பது வெற்றுப் புரளிதான். அது உண்மையாக இருந்தாலும் கூட அதைப்பற்றி நான் கவலைப்படப் போவதில்லை. என் பதவியே போனாலும் நான் இனி வருடம்தோறும் இந்த விழாவில் கலந்து கொள்வேன். யாராலும் என்னை தடுத்து நிறுத்த முடியாது என்று அவர் பேசி முடித்த போது அங்கு கூடியிருந்த மக்கள், 'வெற்றிவேல் வீரவேல்... வாழும் கட்டபொம்மன் வாழ்க' என்று கோஷமிட்டு மகிழ்ந்தனர். துரை வைகோவும் வெற்றிவேல் வீரவேல்' என்று கோஷமிட்டார்.

முன்பு இப்படிதான் வைகோவும் சென்டிமென்ட் பற்றி கவலைப்படாமல் அடிக்கடி இங்கு வந்து சென்றார். ஆனால், அவரால் அரசியலில் ஜொலிக்க முடியவில்லை.தொடர் தோல்வியைத்தான் சந்தித்தார். இப்போது அரசியலில் வளர்ந்து வரும் துரை வைகோ, அவரது தந்தையைப் போலவே வீர வசனம் பேசுகிறார். இது எங்கே போய் முடியுமோ என்று தெரியவில்லை" என்று கவலைப்பட்டார்கள் அவர்கள்.

பாஞ்சாலங்குறிச்சி கோட்டைக்கு வந்தால் பதவி பறிபோய்விடும் என்று சொல்வது உண்மையா? வீர சக்கதேவி ஆலயக் குழு தலைவர் முருகபூபதியிடம் கேட்டோம். "பாஞ்சாலங்குறிச்சி கோட்டைக்கு வந்தால் பதவி போய்விடும் என்று சொல்வதே ஒரு மூடநம்பிக்கைதான். அதை அரசியல் கட்சித் தலைவர்கள் நம்பி வராமல் இருப்பதை வாக்கு வங்கி அரசியலாகவே நாங்கள் பார்க்கிறோம். பாஞ்சாலங்குறிச்சிக்கு பக்கத்தில் இருக்கும் ஓட்டப்பிடாரத்தில் இருக்கும் வீரன் சுந்தரலிங்கம் நினைவிடத்தில் இருக்கும் அவரது சிலைக்கு மாலை போட வருகை தரும் அரசியல் தலைவர்கள், பாஞ்சாலங்குறிச்சி வருவதில்லை.

சட்டமன்ற, நாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்யும் அளவுக்கு எங்கள் சமுதாய மக்கள் எண்ணிக்கை இல்லாததே இதற்கு காரணம். நாங்களும் அதிக அளவில் இருந்தால் அனைத்து தலைவர்களும் சென்டிமென்ட்களை மறந்துவிட்டு இங்கே வரத்தான் செய்வார்கள். இதை நாங்கள் சாதிய ரீதியான வன்முறையாகத்தான் பார்க்கிறோம். பாரதிய ஜனதாவைச் சேர்ந்த இல கணேசன், தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் இங்கு வந்து கட்டபொம்மன் சிலைக்கு மாலை போட்டு சென்ற பிறகுதான் கவர்னர் ஆனார்கள்.

எனவே பதவி போய்விடும் என்கிற சென்டிமென்ட் எல்லாம் சிலரால் ஜோடிக்கப்பட்ட ஒன்றாகும். அந்த வகையில் துரை வைகோவின் வீரத்தைப் பாராட்டுகிறோம். மற்ற அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அவர் ஒரு முன் உதாரணமாக இருக்க வேண்டும் என்றும் விரும்புகிறோம்" என்றார்.

குமுதம் செய்திகளுக்காக செய்தியாளர் எஸ்.அண்ணாதுரை...