அரசியல்

திமுக கூட்டணி: கூடுதல் தொகுதி கேட்பது நியாயமான விருப்பம்.. சண்முகம் பேட்டி

"அதிமுக- பாஜக கூட்டணி தோற்கடிக்க வேண்டும் என்பது இலக்கு. அதேபோல் கூடுதல் தொகுதி கேட்பதும் நியாயமான விருப்பம்" என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் வலியுறுத்தினார்.

திமுக கூட்டணி: கூடுதல் தொகுதி கேட்பது நியாயமான விருப்பம்.. சண்முகம் பேட்டி
கூடுதல் தொகுதி கேட்பது நியாயமான விருப்பம் - சண்முகம்
பாஜக அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரச்சார இயக்க நடைபயணம், சென்னை பிராட்வே குறளகம் அருகே இன்று நடைபெற்றது. அக்கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் தலைமையில் இந்த நடைபயணம் நடைபெற்றது.

பன்னாட்டு கார்ப்பரேட்டுகளுக்காக ஆட்சி நடத்தாதே, மக்கள் விரோத கொள்கைகளை கைவிடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாஜக அரசை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதனையடுத்து, செய்தியாளர்களை சந்தித்து பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம், "ஜூன் 11ஆம் தேதி 20ஆம் தேதி வரை பொதுமக்களை சந்தித்து மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்தும், மாநில அரசு மக்கள் நல சார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் பிரச்சார இயக்கம் நடைபெற உள்ளது. அகில இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொது செயலாளர் பேபி தலைமையில் சென்னை அம்பத்தூரில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

பாஜக அரசு மதவாத அரசியலையும், வகுப்பு வாத அரசியலையும் தான் இந்தியா முழுவதும் செய்து கொண்டிருக்கிறது. மதுரையில் ஜூன் 22ஆம் தேதி முருக பக்தர் மாநாடு ஆன்மீக மாநாடு என்ற பெயரில் பாஜக அரசியல் மாநாடு நடத்த உள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று பாஜக பேசிவருவதில் சந்தேகம் இருக்கிறது. பாஜக சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்த திட்டமிட்டு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று பொது நல வழக்கு தொடரும் போதெல்லாம் ஆகமவிதிகளின் படி மீறுதல் என்று கூறும் பாஜக, தற்போது முருக பக்த மாநாடு மட்டும் ஆகமவிதிகளை மீறிய செயலாகாதா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், "கீழடி ஆராய்ச்சி அறிக்கையை மாற்றி கொடுக்க வேண்டும் என மத்திய அரசு நினைப்பது ஏற்க கூடியது அல்ல. அரசால் நியமிக்கப்பட்ட தொல்லியல் அறிஞரின் அறிக்கையை ஏற்க முடியாது என்று கூறுவது சட்டவிரோதமானது. இந்த செயலை கண்டிக்கிறோம்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "தமிழக மக்களை முன்னிறுத்தி திமுக அரசு பல நல்ல திட்டங்களை அமல்படுத்தி கொண்டிருக்கிறது. இன்னும் நிறைவேற்றாத திட்டங்களை திமுக அரசு உடனே நிறைவேற்ற வேண்டும். மின் அளவீடு மாதந்தோறும் என்ற திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும்.

திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது போல 99% வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாகவும் 1% மட்டுமே நிறைவேற்றவில்லை என திமுக சொல்கிறது. அவர்கள் கணக்கு வழக்குகளில் என்ன பிரச்சனையென்று தெரியவில்லை. மக்களின் கருத்துகளை கேட்டுதான் திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. ஆகவே நிறைவேற்றாத வாக்குறுதிகளை திமுக நிறைவேற்ற வேண்டும் என என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்துகிறது" என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலுவாக இருக்கும் குமரி, திருப்பூர் பகுதியில் போட்டியிடவில்லை. அதனால் எங்கள் வாக்கு வங்கியை ஒப்பிடுவது சரியல்ல. அதேபோல் வரும் தேர்தலில் கூடுதல் தொகுதிகள் திமுக கூட்டணியில் பெருவது விருப்பம். அனைத்து தோழமை கட்சிகளும் கூடுதல் தொகுதிகள் கேட்பது விருப்பம் தான். திமுக தலைமை இதில் பொருத்தமான முடிவை எடுப்பார்கள். அதிமுக- பா.ஜ.க கூட்டணி தோற்கடிக்க வேண்டும் என்பது இலக்கு. அதேபோல் கூடுதல் தொகுதி கேட்பதும் நியாயமான விருப்பம்" என்று அவர் கூறினார்.