சினிமா

துளசியாக சீரியலில் ரீ-என்ட்ரி தரும் முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி!

'கியூங்கி சாஸ் பி கபி பஹு தி' சீரியலின் அடுத்த பாகம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், இதில் நடிக்க முன்னாள் மத்திய அமைச்சரும், நடிகையுமான ஸ்மிருதி இரானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

துளசியாக சீரியலில் ரீ-என்ட்ரி தரும் முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி!
Former Union Minister Smriti Irani Reportedly Signs for Kyunki Saas Bhi Kabhi Bahu Thi Sequel
இந்திய தொலைக்காட்சியின் வரலாற்றில் ஒரு புகழ்பெற்ற சீரியலாக திகழ்ந்த 'கியூங்கி சாஸ் பி கபி பஹு தி' (Kyunki Saas Bhi Kabhi Bahu Thi) தொடரின் அடுத்த பாகத்தில் நடிக்க ஸ்மிருதி இரானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் மூலம், அவரது புகழ்பெற்ற கதாபாத்திரமான துளசி விரானியாகப் (Tulsi Virani) மீண்டும் திரையில் தோன்றுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

காங்கிரஸின் கோட்டை என கருதப்பட்ட உத்தரப்பிரதேசத்தின் அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை தோற்கடித்து இந்திய அரசியிலில் பேசுப்பொருளாகிய ஸ்மிருதி இரானி, அரசியலில் நுழைவதற்கு முன்பே அவர் பிரபலமான நட்சத்திரம் ஆவார்.

ஒரு மாடலாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய ஸ்மிருதி இரானி, 2000-2008 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான பாலாஜி டெலிஃபில்ம்ஸின் (Balaji Telefilms) பிரபல தொலைக்காட்சித் தொடரான 'கியூங்கி சாஸ் பி கபி பஹு தி' (Kyunki Saas Bhi Kabhi Bahu Thi) மூலம் இல்லத்தரசிகளின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இந்த தொடரில் துளசி விரானி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ஒருபுறம் திரைத்துறையில் புகழின் உச்சத்தில் இருந்த போதே, 2003 ஆம் ஆண்டில் அரசியலில் கால் பதித்தார். பாஜகவில் உறுப்பினராக தன்னை இணைத்துக் கொண்டு ஸ்மிருதி இரானி, படிப்படியாக கட்சியில் முக்கிய பொறுப்புகளை வகித்தார். 2004 ஆம் ஆண்டு பாஜகவின் மகளிரணித் துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.

அரசியல் வாழ்வில் நடந்த முக்கிய திருப்பம்:

காங்கிரஸ் கட்சியின் அடுத்த கட்ட தலைவராக ராகுல் காந்தி இருப்பார் என முன்னரே கணித்திருந்த பாஜக நாடாளுமன்றத் தேர்தலில் அவருக்கு எதிராக பலம் வாய்ந்த வேட்பாளரை நிறுத்த திட்டமிட்டது. அதற்கேற்ப 2014 ஆம் ஆண்டு நடைப்பெற்ற மக்களவை பொதுத்தேர்தலில், உத்தரப்பிரதேசத்தின் அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிட களமிறக்கப்பட்டார் ஸ்மிருதி இரானி. அத்தேர்தலில் தோல்வியடைந்தாலும், இவரது களப்பணி பாஜகவினர் மத்தியில் நல்ல பாரட்டினை பெற்றது. தோல்வியுற்றபோதும் தொடர்ந்து அமேதி தொகுதியினை குறிவைத்து பல்வேறு பணிகளை மேற்கொண்டு வந்தார் ஸ்மிருதி இரானி. அதன் பலனாக, 2019 ஆம் ஆண்டு நடைப்பெற்ற பொதுத் தேர்தலில் அதே அமேதி தொகுதியில் ராகுல் காந்தியைத் தோற்கடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் மனிதவள மேம்பாட்டுத்துறை, ஜவுளித்துறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். இந்நிலையில், திரைத்துறையில் மீண்டும் துளசி கதாபாத்திரத்தில் ரீ-எண்ட்ரி கொடுக்கவுள்ளார் ஸ்மிருதி இரானி.

சமீபத்தில் நடந்த தயாரிப்பாளர் ஏக்தா கபூரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஸ்மிருதி இரானியும், மிஹிர் விரானி கதாபாத்திரத்தில் நடித்த அமர் உபாத்யாயும் (Amar Upadhyay) கலந்து கொண்ட போதே 'கியூங்கி சாஸ் பி கபி பஹு தி' சீரியலில் ரீ-எண்ட்ரி கொடுப்பது தொடர்பான சில தகவல்கள் கசிந்தது. அதனை உறுதிப்படுத்தும் வகையில், 'கியூங்கி சாஸ் பி கபி பஹு தி' (Kyunki Saas Bhi Kabhi Bahu Thi) தொடரின் அடுத்த பாகத்தில் நடிக்க ஜூன் 8 ஆம் தேதியன்று, ஒப்பந்தத்தில் ஸ்மிருதி இரானி கையெழுத்திட்டுள்ளார் என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

சுமார் 150 எபிசோடுகளைக் கொண்டதாக உருவாகும் இந்த புதிய தொடர் வருகிற ஜூலை 3 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 'கியூங்கி சாஸ் பி கபி பஹு தி' முதல் பாகமும் ஜூலை 3 ஆம் தேதி தான் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.