இந்தியா

அரசியலமைப்பை பறிப்பதுதான் அவர்களின் திட்டம்.. ராகுல் காந்தி

ஏழைகளின் உரிமைகளை பறித்து மீண்டும் அவர்களை அடிமைப்படுத்துவதே ஆர்எஸ்.எஸ். - பாஜகவுக்கு நோக்கம் என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

அரசியலமைப்பை பறிப்பதுதான் அவர்களின் திட்டம்.. ராகுல் காந்தி
Rahul Gandhi
டெல்லியில் கடந்த 26 ஆம் தேதி நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபலே, “அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் 'சோசலிஸ்ட்', 'மதச்சார்பற்ற' என்ற வார்த்தைகளை அம்பேத்கர் ஒருபோதும் பயன்படுத்தவில்லை.

அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டு, நாடாளுமன்றம் செயல்படாமல், நீதித்துறை முடக்கப்பட்ட அவசரகால நிலையில் இந்த வார்த்தைகள் 42வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் மூலம் சேர்க்கப்பட்டன. அரசியலமைப்பு முகப்புரையில் இருந்து 'சோசலிஸ்ட்', 'மதச்சார்பற்ற' (socialist and secular) என்ற வார்த்தைகளை நீக்க பரிசீலிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இதுகுறித்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், “ஆர்.எஸ்.எஸ்.ஸின் முகத்திரை மீண்டும் கிழிந்துவிட்டது. சமத்துவம், மதச்சார்பின்மை மற்றும் நீதியைப் பற்றிப் பேசுவதால் அரசியலமைப்பு அவர்களுக்கு உறுத்துகிறது.

ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக-வுக்கு அரசியலமைப்புச் சட்டம் வேண்டாம், மனுஸ்மிருதிதான் வேண்டும். இவர்கள் சிறுபான்மையினர் மற்றும் ஏழைகளின் உரிமைகளைப் பறித்து, அவர்களை மீண்டும் அடிமைப்படுத்தவே அவர்கள் விரும்புகிறார்கள். அரசியலமைப்பு போன்ற சக்திவாய்ந்த ஆயுதத்தை அவர்களிடமிருந்து பறிப்பதுதான் இவர்களின் உண்மையான சதி திட்டம்.

ஆர்.எஸ்.எஸ். இந்த கனவு காண்பதை நிறுத்தட்டும் - அவர்களை நாங்கள் ஒருபோதும் வெற்றிபெற விடமாட்டோம். ஒவ்வொரு தேசபக்தி கொண்ட இந்தியனும் கடைசி மூச்சு வரை அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பான்” என்று அவர் தெரிவித்துள்ளார்.