இந்தியா

டீசல் லிட்டருக்கு ரூ. 25 அதிகரிப்பு.. வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

நயாராவை தொடர்ந்து மற்றொரு தனியார் நிறுவனமான ஷெல் இந்தியா, பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி உள்ளது.

டீசல் லிட்டருக்கு ரூ. 25 அதிகரிப்பு.. வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
Shell India
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ள நிலையில், இந்தியாவில் நயாராவைத் தொடர்ந்து தனியார் எரிபொருள் நிறுவனமான 'ஷெல் இந்தியா' (Shell India) பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நடத்தி வரும் தாக்குதல் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 100 அமெரிக்க டாலர்களைத் தாண்டியுள்ளது. இதன் எதிரொலியாக, இந்தியாவில் ஷெல் நிறுவனம் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 7.41-ம், டீசல் விலையை லிட்டருக்கு ரூ. 25-ம் உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு வாகன ஓட்டிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவில் புதிய விலை நிலவரம்

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஷெல் நிறுவனத்தின் பெட்ரோல் மற்றும் டீசல் விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது:

சாதாரண பெட்ரோல்: லிட்டருக்கு ரூ. 119.85.

பவர் பிராண்ட் பெட்ரோல்: லிட்டருக்கு ரூ. 129.85.

சாதாரண டீசல்: லிட்டருக்கு ரூ. 123.52.

பிரிமீயம் டீசல்: லிட்டருக்கு ரூ. 133.52.

மற்ற மாநிலங்களில் அந்தந்த மாநில வரி விகிதங்களுக்கு ஏற்ப விலையில் சிறிய மாற்றங்கள் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத்துறை நிறுவனங்களின் நிலை

தனியார் நிறுவனங்கள் விலையை உயர்த்தினாலும், இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் இதுவரை விலையை உயர்த்தவில்லை. இந்த நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்டவும், சாமானிய மக்கள் பாதிக்கப்படாமல் இருக்கவும் பெட்ரோல், டீசல் மீதான கூடுதல் கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.