இந்தியா

அகமதாபாத் விமான விபத்து: ஐ.நா-வின் உதவியை நிராகரித்தது இந்தியா..!

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பான விசாரணையில் ஐ.நா. உதவ முன்வந்த நிலையில், இந்தியா அதனை நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அகமதாபாத் விமான விபத்து: ஐ.நா-வின் உதவியை நிராகரித்தது இந்தியா..!
UN Offers Aid, India Declines!
குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக் விமான நிலையத்திற்கு கடந்த 12 ஆம் தேதி மதியம் 1.38 மணியளவில் ஏர் இந்தியாவின் ஏஐ 171 போயிங் விமானம் புறப்பட்டது. இந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் மேகானி நகர் மருத்துவ கல்லூரி மாணவர் விடுதி மீது விழுந்து வெடித்து சிதறி பெரும் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 260 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் இந்த மட்டும் அல்லாமல், உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விமானத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் பயணம் செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்த விபத்தில் சிக்கிய விமானத்தின் கருப்புப் பெட்டியின் தரவுகள் பகுப்பாய்வில் ஏற்பட்ட தாமதங்கள் விமர்சிக்கப்பட்ட நிலையில், ஐ.நா.வின் சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு (ICAO), இந்த விபத்து தொடர்பான விசாரணைக்கு உதவ முன்வந்துள்ளது. தனது புலனாய்வாளர்களில் ஒருவரை இந்தியாவுக்கு வழங்குவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

மேலும், ஐ.நா. தான் வழக்கும் புலனாய்வாளருக்கு பார்வையாளர் அந்தஸ்து வழங்குமாறு கோரியது. ஆனால் இந்திய அதிகாரிகள் அதனை நிராகரித்து விட்டனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஐ.நா.விடம் உதவி கோரப்பட்ட பிறகே இதுபோன்ற உதவிகளை வழங்கும். ஆனால் இந்த முறை, ஐ.நா. தாமாக முன்வந்து உதவியை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு (ICAO) முன்பு சில விசாரணைகளுக்கு (உதாரணமாக, 2014ல் மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது மற்றும் 2020ல் உக்ரைன் ஜெட்லைனர் விபத்து) புலனாய்வாளர்களை அனுப்பியுள்ளது. ஆனால், அந்த சமயங்களில் உரிய நாடுகளின் சார்பில் உதவி கோரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், விபத்து நடந்த சுமார் இரண்டு வாரங்களுக்குப் பிறகு விமானத்தின் கருப்பு பெட்டியில் இருந்து தரவுகளைப் பதிவிறக்கம் செய்ததாக இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் நேற்று (ஜூன் 26) தெரிவித்தது.