தமிழ்நாட்டை புறக்கணித்த மத்திய அரசு.. நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிப்போம்.. முதல்வர் ஸ்டாலின்

NITI Aayog Meeting 2024 : தமிழ்நாட்டை புறக்கணிக்கும் மத்திய அரசின் கூட்டத்தை ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பதே சரியாக இருக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Jul 23, 2024 - 18:22
Jul 24, 2024 - 11:04
 0
தமிழ்நாட்டை புறக்கணித்த மத்திய அரசு.. நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிப்போம்.. முதல்வர் ஸ்டாலின்
MK Stalin vs Nirmala Sitaraman

NITI Aayog Meeting 2024 : டெல்லியில் வரும் 27ஆம் தேதி நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டை புறக்கணிக்கும் மத்திய அரசின் கூட்டத்தை ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பதே சரியாக இருக்கும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பீகார், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற சொல்லே இடம்பெறவில்லை.

மத்திய அரசின் பட்ஜெட்டை கடுமையாக விமர்சித்துள்ளார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின். மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் பட்ஜெட் கூட்டணி ஒப்பந்தம் போல் உள்ளது என்றும் மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு வஞ்சிக்கப்படுவது இந்தியாவின் கூட்டாண்மை தத்துவத்துக்கே எதிரானது என்றும் முதல்வர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதனிடையே சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயரே இடம் பெறவில்லை. தமிழ்நாட்டு மக்கள் மீது பாஜக அரசு ஆத்திரத்தில் உள்ளது. மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு ரயில் திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. தமிழகத்திற்கு எந்த ஒரு சிறப்பு திட்டங்களும் மத்திய பட்ஜெட்டில் இல்லை.

தமிழகம் குறித்து எந்த சிந்தனையும் பாஜக அரசுக்கு இல்லை என்பதையே பட்ஜெட் காட்டுகிறது. பாஜக கூட்டணி ஆளும் மாநிலங்களுக்கு மட்டுமே திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மத்திய பாஜக அரசின் நிதி நிலை அறிக்கையில் நீதி இல்லை; அநீதி மட்டுமே உள்ளது. பட்ஜெட்டில் நடுத்தர மக்களுக்கு நன்மை செய்யாமல் பெயரளவுக்கு வருமான வரி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. 

தமிழக மக்கள் வஞ்சிக்கப்படுவது நாட்டின் கூட்டாண்மை தத்துவத்திற்கு எதிரானது. பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து டெல்லியில் திமுக எம்.பி.க்கள் போராட்டம் நடத்துவார்கள்.

தமிழ்நாட்டை புறக்கணிக்கும் ஒன்றிய அரசின் கூட்டத்தை ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பதே சரியாக இருக்கும். தமிழ்நாட்டு மக்களை பட்ஜெட்டில் புறக்கணித்ததால் டெல்லியில் வரும் 27ஆம் தேதி நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கிறேன். தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்ட மக்கள் மன்றத்தில் தொடர்ந்து போராடுவோம்.பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து டெல்லியில் திமுக எம்.பிக்கள் போராட்டம் நடத்துவார்கள் எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow