Senthil Balaji : 14 மாத சிறைவாசம்.. சுதந்திரத்தை சுவாசிக்க முடியாத செந்தில் பாலாஜி.. தள்ளிப்போகும் ஜாமின்

Senthi Balaji Bail Case : 14 மாத காலமாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் வழக்கு மீண்டும் ஆகஸ்ட் 20ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

Aug 14, 2024 - 06:46
Aug 15, 2024 - 09:59
 0
Senthil Balaji : 14 மாத சிறைவாசம்.. சுதந்திரத்தை சுவாசிக்க முடியாத செந்தில் பாலாஜி.. தள்ளிப்போகும் ஜாமின்
Senthi Balaji Bail Case

Senthi Balaji Bail Case : சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். 14 மாதங்களாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்கவில்லை. ஜாமின் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும் சென்னை உயர்நீதிமன்றமும் தள்ளுபடி செய்துவிட்ட நிலையில் ஜாமின் கோரி உச்சநீதிமன்ற கதவை தட்டியுள்ளார் செந்தில் பாலாஜி(Senthi Balaji Case). இன்று உச்சநீதிமன்றம் ஜாமின் வழக்கை விசாரித்த நிலையில் ஆகஸ்ட் 20ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது. 

கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி(Senthi Balaji) மீது அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு பணம் பெற்றுக்கொண்டு வேலை வாங்கிக் கொடுக்காமல் ஏமாற்றியதாக 3 மோசடி வழக்குகளை சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் பதிவு செய்திருந்தனர். 

இந்த வழக்குகளின் அடிப்படையில் அவர் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில்(Money Laundering Case) ஈடுபட்டுள்ளதாகக் கூறி அவரை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்தாண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்தனர். கடந்த ஓராண்டுக்கு மேலாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில்பாலாஜி ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுக்களை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதன்பின்னர் சென்னை உயர்நீதிமன்றமும் தொடர்ச்சியாக தள்ளுபடி செய்திருந்தது. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் ஜாமின் கோரியும் மனு தாக்கல் செய்தார் செந்தில் பாலாஜி. 

இந்த வழக்கு விசாரணை கடந்த சில மாதங்களாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஜாமின் வழக்கு  நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது செந்தில் பாலாஜி(Senthi Balaji) தரப்பு வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, வழக்குக்கு சம்பந்தமில்லாத வாதங்களை எல்லாம் அமலாக்கத் துறை முன் வைக்கிறது என்றார். 

அப்போது அமலாக்கத் துறை, செந்தில் பாலாஜிக்கு மாநில அரசு உதவி வருகிறது. இந்த வழக்கை 3 மாதங்களில் முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் தற்போது வரை முடிக்கவில்லை. இதில் செந்தில் பாலாஜி தரப்பில் 13 முறை இந்த வழக்கை ஒத்திவைக்க கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அமலாக்கத் துறை ஒரு முறை கூட அவ்வாறு கேட்டதில்லை. எனவே விசாரணை தாமதமாவது குறித்து தனியாக நாங்கள் அறிக்கை தாக்கல் செய்யவுள்ளோம் என வாதிட்டனர். 

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் ஒவ்வொரு முறை இந்த வழக்கு விசாரணைக்கு வரும் போது அமலாக்கத் துறை வெவ்வேறு விவகாரங்களை சுட்டிக் காட்டிக் கொண்டே இருக்கிறது. எங்களை பொருத்தவரை சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் இந்த விவகாரத்தில் விசாரணை நடைமுறைகளை தான் நாங்கள் விசாரிக்கிறோம் இந்த விவகாரத்தில் விசாரணை எப்போது நிறைவடையும் என கேள்வி எழுப்பினார். அதற்கு அமலாக்கத் துறை தரப்பில் செந்தில் பாலாஜியின் விசாரணையை தமிழக அரசு தாமதப்படுத்துகிறது என தெரிவிக்கப்பட்டது.

அப்போது செந்தில் பாலாஜி(Senthi Balaji) தரப்பு, இந்த வழக்கின் விசாரணை எப்போது நிறைவடையும் என கேட்கும் நிலைக்கு அமலாக்கத் துறை உள்ளது. ஆனால் மனுதாரருக்கு ஜாமின் வழங்க வேண்டும் என்பதுதா் எங்களது கோரிக்கை, விசாரணையே தொடங்காத நிலையில் அவரை எத்தனை நாட்களுக்கு சிறையில் வைத்திருக்க முடியும். 14 மாதங்களாக சிறையில் செந்தில் பாலாஜி இருந்து வருகிறார். தற்போது வரை இந்த வழக்கில் விசாரணை தொடங்கப்படவில்லை. விசாரணை எப்போது தொடங்கும் என்பதும் தெரியவில்லை.

 சிறையில் இருக்கும் போது நெஞ்சு வலி ஏற்பட்டு அதற்கான அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது. முன்பு அவர் அமைச்சராக இருந்தார், ஆனால் தற்போது அவர் எந்த பதவியிலும் இல்லை. எனவே அவரால் சாட்சிகளை கலைக்கவும் முடியாது, விசாரணையில் தனது செல்வாக்கை பயன்படுத்தி இடையூறு ஏற்படுத்தவும் முடியாது. அரசியல் சாசனப் பிரிவு 21-ன் கீழ் மணிஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்கிய உத்தரவு செந்தில் பாலாஜிக்கு(Senthi Balaji) பொருந்தும் என முகுல் ரோத்தகி வாதம் செய்தார். 

ஆனால் அமலாக்கத் துறையோ, மணீஷ் சிசோடியாவுக்கு வழங்கிய உத்தரவு செந்தில் பாலாஜிக்குப்(Senthi Balaji) பொருந்தாது என்று தெரிவித்தது. இந்த நிலையில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் , இந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்தி வைத்திருந்தனர். 

செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீதான  வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், செந்தில்பாலாஜி மீதான 3 வழக்குகள் மீதும் அமலாக்கத்துறை விசாரணை நடத்துகிறதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் ஆஜராக சுப்ரீம் கோர்ட் கூறிய நிலையில் வழக்கை பிற்பகலுக்கு ஒத்திவைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. அமலாக்கத்துறை கோரிக்கையை ஏற்று பிற்பகல் இறுதி வழக்காக விசாரிப்பதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்தது.

இந்நிலையில் செந்தில் பாலாஜி ஜாமின் மனு பிற்பகலில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனுவை ஆகஸ்ட் 20-ந்தேதிக்கு பட்டியலிட உத்தரவிட்டனர். ஆகஸ்ட் 20ஆம் தேதி முதல் வழக்காக பட்டியலிடப்படும் என்றும் தாங்கள் எழுப்பிய கேள்விக்கு அமலாக்கத்துறை பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் ஜாமின் வழக்கை ஆகஸ்ட் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

ஆளுங்கட்சி அமைச்சராக இருந்து அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, தனது அமைச்சர் பதவியை இழந்து பல மாதங்களாகியும் ஜாமின் கிடைக்காமல் மன உளைச்சலில் இருக்கிறார். சுதந்திர தினத்தில் சுதந்திர காற்றை சுவாசிக்கலாம் என நினைத்த செந்தில் பாலாஜிக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் இது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow