கோட் அட்ராசிட்டி.. திறந்த வாகனத்தின் மீதேறி அடாவடி செய்த விஜய் ரசிகர்கள் - ராமநாதபுரத்தில் ரகளை
விஜய் நடிப்பில் உருவான 'கோட் திரைப்படம்' இன்று வெளியான நிலையில், அவரது ரசிகர்கள் அதனை கொண்டாடி வருகின்றனர்.பல ஊர்களில் கொண்டாட்டங்கள் அமைதியாக இருந்தாலும் சில ஊர்களில் விஜய் ரசிகர்கள் செய்த ரகளை பொதுமக்களை முகம் சுளிக்க வைத்தது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள “தி கோட்” திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் விஜய்யுடன், பிரசாந்த், பிரபுதேவா, யோகிபாபு, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்பட பலர் நடித்துள்ளனர். ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். டிஏஜிங் தொழில்நுட்பம் மூலம் விஜய் இளம் வயதில் தோன்றும் காட்சிகள் இருப்பதால் இப்படத்தின் மீது பெரியளவில் எதிர்பார்ப்பு எழுந்தது.
திருவள்ளூர் ராக்கி திரையரங்கில் 9 மணிக்கு சிறப்பு காட்சி திரையிடப்பட்டதால் ரசிகர்கள் அதிகாலை முதலே ரசிகர்கள் திரையரங்குக்கு வந்து அங்கு வைக்கப்பட்டிருந்த விஜய்யின் பேனருக்கு பாலபிஷேகம் செய்து ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
விஜய் ரசிகர்கள் மதுரை தவுட்டுச்சந்தையில் இருந்து பெரியார் பேருந்து நிலையம், வசந்த நகர் வழியாக 150க்கும் மேற்பட்ட இளைஞர்கள் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக இருசக்கர வாகனத்தில் மதுரை நகர் முழுவதும் உலா வருகின்றனர். இதனால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ரசிகர்களின் செயலால் பொதுமக்கள் அதிருப்தியடைந்தனர்.
இதே போல ராமநாதபுரத்தில் ஏழு திரையரங்கில் விஜய்யின் கோட் திரைப்படம் வெளியான நிலையில், புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஜெகன் தியேட்டரில் படம் பார்க்க வந்த விஜய் ரசிகர்கள் டாட்டா சுமோ வாகனத்தில் மேலாடையை கழற்றி அரை நிர்வாணமாக வந்து அலப்பறை செய்தது முகச்சுழிப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து ரசிகர்கள் பட்டாசு வெடித்து நீண்ட வரிசையில் காத்திருந்து ஆரவாரம் செய்து படம் பார்க்கச் சென்றனர்.விஜய் ரசிகர்கள் மது போதையில் ஆரவாரம் செய்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
What's Your Reaction?