மீண்டும் பா.ரஞ்சித், சந்தோஷ் நாராயணன் கூட்டணி... வாழை விழாவில் ஏற்பட்ட ‘சமரசம்’

Pa Ranjith Talks About Santhosh Narayanan : இயக்குனர் பா.ரஞ்சித், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஆகியோர் இடையேயான மனக்கசப்பு முடிவுக்கு வந்துள்ளது. இருவரும் வாழை படவிழாவில் ஒருவரையொருவரை புகழ்ந்து நெகிழ்ச்சியாக பேசினர். அடுத்து மீண்டும் இணைய வாய்ப்பு

Jul 19, 2024 - 17:01
Jul 20, 2024 - 10:22
 0
மீண்டும் பா.ரஞ்சித், சந்தோஷ் நாராயணன் கூட்டணி... வாழை விழாவில் ஏற்பட்ட ‘சமரசம்’
Pa Ranjith Talks About Santhosh Narayanan

Pa Ranjith Talks About Santhosh Narayanan : தமிழ் சினிமாவில் சில கூட்டணிகளுக்கு மவுசு அதிகம். நட்பு, வெற்றியை தாண்டி, சென்டிமென்ட்டாகவும் பல காலம் அந்த கூட்டணி தொடரும். ஹீரோ-ஹீரோயின் கூட்டணி, இயக்குனர்-ஹீரோ, தயாரிப்பாளர்-ஹீரோ கூட்டணி மட்டுமல்ல, சில இயக்குனர்-இசையமைப்பாளர் கூட்டணியும் பல படங்களில் தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளது. மணிரத்னம்-ஏ.ஆர்.ரகுமான், லோகேஷ்கனகராஜ்-அனிருத், கவுதம்மேனன்-ஹாரிஸ் ஜெயராஜ், பிரபுசாலமன்-இமான்  கூட்டணி இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். அந்த வகையில் பா.ரஞ்சித்- சந்தோஷ்நாராயணன் கூட்டணி பல வெற்றிகளை கொடுத்தது

குறிப்பாக, பா.ரஞ்சித் இயக்கிய அட்டக்கத்தி, மெட்ராஜ், காலா, கபாலி, சார்பட்டா பரம்பரை படங்களின் வெற்றிக்கு சந்தோஷ் நாராயணன் பாடல்கள், பின்னணி இசையும் ஒரு முக்கியமான காரணம் என்று சொல்லலாம். ஆனால், அடுத்து பா.ரஞ்சித் இயக்கிய நட்சத்திரம் நகர்கிறது படத்துக்கு டென்மாவும், விரைவி்ல் வர இருக்கிற தங்கலான் படத்துக்கு ஜி.வி.பிரகாசும் இசையமைத்துள்ளனர். தெருக்குரல் அறிவு, சந்தோஷ்நாராயணன் இடையேயான எஞ்சாமி ஆல்பம் பஞ்சாயத்து, வேறு சில காரணங்களால் இந்த கூட்டணி உடைந்துவிட்டது என்று கூறப்பட்டது. பா.ரஞ்சித் இயக்கும் படங்களுக்கு மட்டுமல்ல, அவர் தயாரிக்கும் படங்களுக்கும் சந்தோஷ் நாராயணன் இசையமைக்காமல் இருந்தார். பா.ரஞ்சித் தயாரிக்க, மாரிசெல்வராஜ் இயக்கி வரும் பைசன் படத்துக்கு நிவாஸ்.கே.பிரசன்னா இசையமைப்பாளராக இருக்கிறார்.

ஆனாலும், இருவரும் யாரையும் நேரடியாக, மறைமுகமாக தாக்கி பேசவில்லை. இந்நிலையில், சென்னையில் நடந்த மாரிசெல்வராஜின் வாழை பட பர்ஸ்ட் சிங்கிள் வெளியீட்டுவிழாவில் சற்றே இடைவெளிக்குபின் பா.ரஞ்சித், சந்தோஷ்நாராயணன் ஆகியோர் மேடையில் அருகருகே கலந்துகொண்டனர். பா.ரஞ்சித் பேசுகையில் சந்தோஷ் நாராயணன் இசையை புகழ்ந்தார். அதேபோல் சந்தோஷ்நாராயணன் பே சியபோது ‘அட்டக்கத்தி தொடங்கி பல விஷயங்களை பேசி, பா.ரஞ்சித்தை புகழ்ந்தார். இந்த பேச்சு பலரையும் கவர்ந்தது.

குறிப்பாக, ‘‘ஒரு ஆறு லட்சம் இருந்தால் அட்டக்கத்தியை ரிலீஸ் பண்ணிடலாம்னு நாங்க நினைத்தோம். எங்களால் அந்த பணத்தை புரட்ட முடியலை. கடைசியில் ஞானவேல்ராஜா வந்து ரிலீஸ் செய்தார். அடுத்து பா.ரஞ்சித் கபாலி ஒப்பந்தம் ஆனபோது, என்னிடம் பேசினார். அந்த சமயத்தில் உன் டீமை விட்டு விடாதே. எப்போது இருப்பவர்களுடன் சேர்ந்த படம் பண்ணு மாமுனு சொன்னார். நான் அப்ப கட்டி பிடித்து பீல் பண்ணினேன். அடுத்து அவர் தயாரித்த பரியேறும்பெருமாள் கொடுத்தார். அந்த படம் ஹிட்.’ என்றார் சந்தோஷ் நாராயணன்.  பா.ரஞ்சித் பேசுகையில் ‘‘வாழை படத்தில் சந்தோஷ் நாராயணன் இசை நன்றாக வந்துள்ளது. அதில் தீ அருமையாக பாடியிருக்கிறார். ரொம்ப நாள் கழித்து சந்தோசை பார்க்கிறேன். சூப்பர் மாமு’ என்று நெகிழ்ந்தார். 

இந்த பாசப்பிணைப்பை பார்த்தவர்கள், விரைவில் இந்த கூட்டணி மீண்டும் இணைய வாய்ப்பு. பா.ரஞ்சித் அடுத்து இயக்கும்  படத்தில் சந்தோஷ்நாராயணன் இசையமைக்க வாய்ப்பு இருப்பதாக பேசிக்கொண்டனர். முன்னதாக, அதே இடத்தில் நடந்த தெருக்குரல் அறிவின் வள்ளியம்மா பேராண்டி ஆல்பம் வெளியீட்டுவிழாவில் சந்தாஷ்நாராயணன் இ்ல்லாதபோதும் அவரை மேடையில் புகழ்ந்தார் பா.ரஞ்சித். இதனால், சமீபகாலமாக அவர்களுக்கு இடையே இருந்த மனக்கசப்பு நீங்கிவிட்டதாக கூறப்படுகிறது. இருவரும் அடுத்த இணையும் படம் சார்பட்டா பரம்பரை 2 வாக இருக்க வாய்ப்பு.

**

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow