உலகம்

ஈரானின் அதிரடி முடிவு.. பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பு?

அமெரிக்காவின் தாக்குதலை தொடர்ந்து, ஹார்முஸ் நீரிணையை மூட ஈரான் முடிவு செய்துள்ளது. இந்த நீரிணை வழியே பல்வேறு நாடுகளுக்கு கப்பலில் கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படுகிறது. இதனால் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஈரானின் அதிரடி முடிவு.. பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பு?
Iran strait of hormuz
ஈரானின் அணு ஆயுத திட்டங்கள் அச்சுறுத்தல் தரும் விதமாக உள்ளதாக அந்நாடு மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்கதலுக்கு ஈரானும் பதிலடி கொடுத்து வரும் நிலையில் இரு நாடுகளுக்கும் இடையில் போர் நிலவி வருகிறது.

இந்த நிலையில், ஈரான் நிபந்தனையற்று சரணடைய வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வலியுறுத்தியிருந்தார். இதற்கு ஈரானின் உச்ச தலைவர் அபயதுல்லா அலி காமேனி, ஈரான் ஒருபோதும் சரண் அடையாது என்றும், இஸ்ரேல்- ஈரான் சண்டையில் அமெரிக்கா தலையீடு செய்தால், சரி செய்ய முடியாத அளவிற்கு விளைவுகளை சந்திக்க நேரிடும்" எனக் எச்சரித்திருந்தார்.

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்:

இஸ்ரேல் - ஈரான் இடையே மோதல் போக்க அதிகரித்துள்ள நிலையில், ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் களத்தில் இறங்கியது. ஈரானின் ஃபோர்டோ, நடான்ஸ், எஸ்பஹான் ஆகிய 3 அணுசக்தி நிலையங்கள் மீது வெற்றிகர தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்திருந்தார்.

ஈரான் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியத்துக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், "அமெரிக்காவின் தாக்குதல் மிகவும் கவலையளிப்பதாக தெரிவித்தார். நிலைமை மேலும் மோசமடைந்தால் பேரழிவுகரமான விளைவுகள் ஏற்படும்" என்று ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் எச்சரித்தார்.

பதிலடி கொடுத்த ஈரான்:

இந்த நிலையில், அமெரிக்க தாக்குதல் நடத்திய அடுத்த சில மணிநேரங்களில் இஸ்ரேலின் டெல் அவிவ், ஹைபா நகரங்களின் மீது 40க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை இரண்டு கட்டங்களாக ஈரான் வீசியது. இந்த ஏவுகணைகளில் பல, இஸ்ரேலின் வான் கவசத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டாலும், சில ஏவுகணைகள் விழுந்து வெடித்தன.

ஹார்முஸ் நீரிணையை மூட ஈரான் முடிவு:

இந்த நிலையில், அமெரிக்காவின் தாக்குதலை தொடர்ந்து, கச்சா எண்ணெய் போக்குவரத்தின் முக்கிய பங்காக உள்ள ஹார்முஸ் நீரிணையை மூட ஈரான் நாடாளுமன்றம் அனுமதி அளித்துள்ளது. அமெரிக்க எரிசக்தி தகவல் நிர்வாகத்தின் அறிக்கையின்படி, "உலகம் முழுவதுக்குமான 20% கச்சா எண்ணெய் இந்த நீரிணை வழியேதான் பல்வேறு பகுதிகளுக்கு கப்பலில் கொண்டு செல்லப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கான 40 சதவீத கச்சா எண்ணெய் ஹார்முஸ் நீரிணை வழியாக இறக்குமதி செய்யப்படுகிறது. ஹார்முஸ் நீரிணையை மூடப்பட்டால் இந்தியா வாங்கும் கச்சா எண்ணெயின் விலை கடுமையாகப் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. மேலும், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை உயரும் என்ற அபாயம் ஏற்பட்டுள்ளது. ஹார்முஸ் நீரிணை இந்தியாவுக்கு வரும் மற்றும் அங்கிருந்து செல்லும் கப்பல்களுக்கான ஒரு முக்கிய வர்த்தகப் பாதை என்பதும் குறிப்பிடத்தக்கது.

எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது - மத்திய அமைச்சர்:

இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு, பெட்ரோல், டீசல் விலை உயரக்கூடும் என்ற அச்சம் நிலவி வருகிறது. இந்த நிலையில், போர் பதற்றத்தால் இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.