உலகம்

கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்... ஹோர்முஸ் நீரிணையை கடந்த இந்தியக் கப்பல்கள்!

வளைகுடாப் பகுதியில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு இடையே, இந்திய எண்ணெய் மற்றும் சரக்குக் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை வழியாகப் பயணிக்க ஈரான் அரசு அனுமதி வழங்கியுள்ளது.

கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்... ஹோர்முஸ் நீரிணையை கடந்த இந்தியக் கப்பல்கள்!
Strait of Hormuz
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான மோதலைத் தொடர்ந்து, சர்வதேச எரிசக்தி வர்த்தகத்தின் முக்கியப் பாதையான ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அறிவித்திருந்தது. மேலும், பிரிட்டன் மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் கப்பல்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்களும் நடத்தப்பட்டதால், அப்பகுதியில் கடும் பதற்றம் நிலவியது. இதனால் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்குக் கச்சா எண்ணெய் கொண்டு வருவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது.

ஜெய்சங்கரின் பேச்சுவார்த்தையும் ஈரானின் முடிவும்

இந்த இக்கட்டான சூழலில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சியுடன் அவசரப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் விளைவாக, இந்தியாவிற்கு எரிபொருள் கொண்டு வரும் கப்பல்களை அனுமதிக்க ஈரான் சம்மதம் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து, இந்தியக் கொடியுடன் வந்த 'புஷ்பக்' மற்றும் 'பரிமல்' ஆகிய இரு சரக்குக் கப்பல்களும் ஈரானின் பாதுகாப்பான அனுமதியுடன் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்துள்ளன.

எரிபொருள் தட்டுப்பாடு குறைய வாய்ப்பு

இந்தியா மட்டுமின்றி சீனா, வங்கதேசம் ஆகிய நாடுகளின் கப்பல்களுக்கும் ஈரான் அனுமதி வழங்கியுள்ளதாகத் தெரிகிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் தொடர்புடைய கப்பல்கள் மீது மட்டும் ஈரான் தனது கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து வருகிறது. இந்திய எண்ணெய் கப்பல்கள் தடையின்றி வரத் தொடங்கியுள்ளதால், கடந்த சில நாட்களாக நாட்டில் நிலவி வரும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விறகு விலை உயர்வு போன்ற பிரச்சனைகள் படிப்படியாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.