தமிழ்நாடு

மதுரையில் காவல் நிலையத்தில் புகுந்து தாக்குதல்- இருவர் கைது

மதுரை சத்திரப்பட்டி காவல் நிலையத்திற்கு புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவத்தில் இருவரை கைது செய்து போலீஸ் விசாரணை

மதுரையில் காவல் நிலையத்தில் புகுந்து தாக்குதல்- இருவர் கைது
மதுரை வி.சத்திரப்பட்டி காவல் நிலையம்
மதுரை மாவட்டம், பேரையூர் தாலுகா வி.சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் நேற்று அதிகாலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் தாக்குதல் சம்பவம் நடைபெற்றது.

காவல் நிலையத்தில் தாக்குதல்

நேற்று முன்தினம் 13ம் தேதி இரவு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் பால்பாண்டி மீது அதே ஊரைச் சேர்ந்த பிரபாகரன் (எ) போராளி பிரபாகரன் மற்றும் அவரது நண்பர் அய்யனார் தாக்குதல் நடத்தினர். அதிகாலை 12.30 மணிக்கு காவல் நிலையம் வந்த பிரபாகரன் என் தந்தையை எப்படி விசாரணைக்கு அழைத்துச் செல்லலாம்? எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். திடீரென கட்டையால் காவலரை தாக்கி அறைக்குள் தள்ளி பூட்டியும் உள்ளார்.

பின்னர் காவல் நிலையத்தில் உள்ள கணினி உள்பட பல பொருட்களை அடித்து நொறுக்கி காவல்நிலையத்தை சூறையாடியதுடன் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.போலீஸ் ஸ்டேஷன் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்ததால், காவலர் பால்பாண்டிக்கு உடனடியாக யாரையும் அழைப்பதற்கோ, தகவல் தெரிவிப்பதற்கோ வழியில்லாமல் போனது. அவரது மொபைலும் அந்த கும்பலினால் சேதமடைந்ததால் உதவியை கூட அவரால் பெற முடியவில்லை என கூறப்படுகிறது.

போலீஸ் விசாரணை

அதிகாலை அந்த வழியே சென்ற ஒருவர் மூலம் பால்பாண்டி உதவிக்காக அழைத்த நிலையில், ஜன்னல் வழியாக நடந்ததை கூறி கதவினை திறக்கச் செய்ததாக கூறப்படுகிறது. மேலும், சம்பவம் குறித்து காவல்துறையின் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து, மதுரை மாவட்ட எஸ்.பி அரவிந்த் நேரில் வந்து அங்கு ஆய்வு செய்தார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பிரபாகரன் மீது ஏற்கனவே 3 கொலை வழக்குகள் மற்றும் குண்டர் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டிருந்தவர் என தெரியவந்தது. தொடர்ந்து, 2 மாதங்களுக்கு முன்னர் ஜாமினில் வெளியே வந்திருந்த நிலையில், 13ஆம் தேதி அவரது வீட்டிற்கு சென்ற போலீசார் அவரது தந்தையான முத்துவேலை திண்டுக்கல் போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

2 பேர் கைது

மேலும், மதுரை போலீசார் தான் விசாரணைக்கு அழைத்து சென்றதாக தவறாக எண்ணி அதனை கருத்தில் கொண்டு இந்த தாக்குதலை தனது நண்பருடன் சேர்ந்து நடத்தியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் செய்து விட்டு அங்கிருந்து தலைமறைவாக இருந்த பிரபாகரனும் அவரது நண்பர் அய்யனாரையும் மதுரை மாவட்ட உசிலம்பட்டி டிஎஸ்பி தலைமையில் 4 தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் அல்லம்பட்டி சோதனை சாவடியில் நேற்று மாலை விருதுநகர் போலீசார் கைது செய்தனர். பின்னர் குற்றவாளிகள் இருவரையும் மதுரை மாவட்ட போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார்.

முன்னதாக திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் நேற்று காலை சம்பவம் நடந்த முத்துலிங்காபுரம் அருகே உள்ள வி.சத்திரப்பட்டி காவல் நிலையத்திற்கு சென்று பார்வையிட முற்பட்ட போது போலீசார் அவரை தடுத்து நிறுத்தி ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.