தமிழ்நாடு

பூனை கடியை அலட்சியப்படுத்தியதால் ஏற்பட்ட பாதிப்பு...சிகிச்சையில் இருந்த இளைஞரின் விபரீத முடிவு

மதுரையில் பூனைக்கடியால் பாதிக்கப்பட்ட இளைஞர் அரசு மருத்துவமனையில் தனி சிகிச்சை அறையில் இருந்தபடி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பூனை கடியை அலட்சியப்படுத்தியதால் ஏற்பட்ட பாதிப்பு...சிகிச்சையில் இருந்த இளைஞரின் விபரீத முடிவு
பூனை கடித்ததால் பாதிப்பு

மதுரை மாநகர் அவனியாபுரம் காமராஜர்நகர் மருதுபாண்டியர் தெருவை சேர்ந்த ஆனந்தன் - விஜயலெட்சுமி தம்பதியினர். இவர்களுக்கு இரு மகன்கள்., ஒரு மகளுடன் வசித்து வந்துள்ளனர். தம்பதியினரின் மூத்த மகனான பாலமுருகன் (25) கல்லூரி படிப்பை முடித்துவிட்டு குடும்பத்தின் பொருளாதார தேவைக்காக பல்வேறு வேலைக்கு சென்று சம்பாதித்து குடும்பத்திற்கு உதவி வந்துள்ளார்.

இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வீட்டு மாடியில் உறங்கிகொண்டிருந்தபோது திடீரென 2 பூனைகள் சண்டையிட்டபடி வந்து பாலமுருகன் மீது விழுந்துள்ளது.இதனால் பாலமுருகன் பதற்றத்தில் எழுந்தபோது பூனை ஒன்று எதிர்பாராதவிதமாக பாலமுருகனின் தொடையில் கடித்துள்ளது. இதில் சிறிய காயம் ஏற்பட்டதால் காயங்களுக்கான டீட்டி ஊசியை மட்டும் செலுத்திவிட்டு இயல்பான நாட்களை போன்று பணிக்கு சென்றுவந்துள்ளார்.

திருமண ஏற்பாடு

இதனிடையே பாலமுருகனின் தந்தைக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டபோது அவருக்கு உதவியாக மருத்துவமனையில் இருந்துவந்ததோடு வேலைக்கும் சென்று வந்துள்ளார். தந்தைக்கு உடல்நிலை சரியான நிலையில் பாலமுருகனுக்கு திருமணம் செய்வதற்காக குடும்பத்தினர் வரன் பார்த்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த வாரம் திடீரென பாலமுருகனுக்கு அடிக்கடி தலைவலி வருவதாக கூறியுள்ளார். மேலும் குடிக்க தண்ணீரை கொடுத்தபோது தண்ணீரை பார்த்தும், காற்று வீசும்போது பயந்து விலகுவது போன்று செய்துவந்துள்ளார். இதனையடுத்து அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக 2 நாட்களாக அனுமதித்த நிலையில், ரேபி்ஸ் போன்ற அறிகுறி இருப்பதாக கூறி அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இளைஞர் தற்கொலை

இதனையடுத்து பாலமுருகனை நேற்றிரவு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து வந்துள்ளனர். அங்கு பாலமுருகனின் உடல் நிலையை பரிசோதித்த மருத்துவர்கள் ரேபிஸ் நோய் பாதிக்கப்பட்டதாக கூறி ரேபிஸ் நோய் சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர். அப்போது பாலமுருகன் கூச்சலிட்டபட்டி அறையில் இருந்தபோது அங்கிருந்து வெளியேற முயன்றுள்ளார். இதனையடுத்து ரேபிஸால் பாதிக்கப்பட்ட பாலமுருகனை அங்குள்ள தனி அறையில் வைத்துள்ளனர்.

அப்போது இரவு முழுவதும் காயத்தால் ஏற்பட்ட வலியாலும், மன உளைச்சலாலும் புலம்பியபடி அங்கும் இங்கும் ஓடியபடி இருந்த இளைஞர் பாலமுருகன் அதிகாலையில் அறையில் இருந்த போர்வையால் கழுத்தில் இறுக்கி கட்டி கதவில் கட்டி தொங்கியபடி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.இதனையடுத்து மருத்துவமனை செவிலியர்கள் அறைக்கு சென்று பார்த்தபோது பாலமுருகனின் உடலை பார்த்து அதிர்ச்சியடைந்து காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். பின்னர் அங்குவந்த அரசு ராஜாஜி மருத்துவமனை காவல்நிலைய காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூராய்வு அறைக்கு அனுப்பிவைத்தனர்.

போலீஸ் விசாரணை

உலக கால்நடை மருத்துவ தின நாளில் பூனைக்கடியை அலட்சியமாக விட்டதால் 26 வயது இளைஞருக்கு ரேபிஸ் நோய் ஏற்பட்டு சிகிச்சை அறையில் தற்கொலை செய்து உயிரிழந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பூனைக்கடித்ததை அலட்சியமாக விட்டதால் மூன்று மாதத்திற்கு பிறகு ரேபிஸ் நோயால் மிகப்பெரிய உடல் நலக்குறைவு ஏற்பட்டு இளைஞர் தனியாக சிகிச்சைக்காக அடைக்கப்பட்ட அறையில் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாலமுருகனின் இழப்பு அவரது குடும்பத்தினருக்கு பொருளாதார இழப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் , பூனை கடித்ததால் காயம் இருப்பதை கூட பாலமுருகன் சொல்லாமல் இருந்துவிட்டதாகவும் நேற்று தனியார் மருத்துவமனையில் இருந்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து ரேபிஸ் சிகிச்சை வார்டில் அனுமதித்த சில மணி நேரத்திலயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதால் மிகப்பெரிய அதிர்ச்சியில் உள்ளோம். அரசு மருத்துவமனையில் பரிசோதித்தபோது ரேபிஸ் நோய் இருப்பதாக பாலமுருகனிடம் கூறியதால் மன உளைச்சலுக்கு ஆளாகி தூக்கிட்டு இந்த விபரீத முடிவு எடுத்துள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.