தமிழ்நாடு

டாஸ்மாக் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை தெரிவித்த அதிர்ச்சி தகவல்!

டாஸ்மாக் முறைகேடு மூலம், ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்தது சோதனையில் தெரியவந்துள்ளதாக அமலாக்கத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

டாஸ்மாக் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை தெரிவித்த அதிர்ச்சி தகவல்!
அமலாக்கத்துறை - சென்னை உயர்நீதிமன்றம்
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை அமலாக்க துறை நடத்திய சோதனையை சட்டவிரோதமானது என அறிவிக்க கோரி டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் தாக்கல் செய்த வழக்கு வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகர் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது டாஸ்மாக் சார்பில், மூத்த வழக்கறிஞர் விக்ரம் சவுத்ரி மற்றும் தமிழ்நாடு அரசு சார்பில் அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் மற்றும் ஆகியோர் வாதிட்டனர். அப்போது, அமலாக்கத் துறை எப்போதும் வெளிப்படையாக இருந்ததில்லை எனவும் வெளிப்படையாக இருப்பதாக ஒரு பிம்பத்தை உருவாக்கி அதன் பின்னால் அமலாக்கத்துறை ஒளிந்து கொண்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

எந்த நம்பிக்கையின் அடிப்படையில் குற்றம் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை கருதுகிறது? எதற்காக சோதனை செய்கிறோம் என்பதை அமலாக்கத்துறை தெரிவிக்க வேண்டும் எனவும் கூறினர். அமலாக்கத் துறையின் நடவடிக்கையால் நேரடியாக டாஸ்மாக்கின் நற்பெயருக்கும், மறைமுகமாக அரசின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

2007ம் ஆண்டு முதல் 2021 வரை ஆண்டு முறைகேடு கூறப்படும் நிலையில், தற்போது தான் ஞானம் வந்தது போல விசாரணை நடத்துவது ஏன் எனவும் அரசுத்தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. இன்றைக்கு டாஸ்மாக் குறிவைக்கப்படுகிறது. நாளை ஒவ்வொரு துறையும் குறிவைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

விசாரணை என்ற பெயரில் பெண் அதிகாரிகளை அடைத்து வைத்து நள்ளிரவில் வீட்டுக்கு அனுப்பியது
சரியான நடத்தையா? எனவும் அரசுத்தரப்பில் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், அனைத்து துறைகளிலும் ஊழலை ஒழிப்பது தானே அரசின் நோக்கம் என கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த தலைமை வழக்கறிஞர், அதில் மாற்றுக்கருத்து இல்லை எனவும் அதனை மாநில அரசு கவனித்துக்கொள்ளும் அமலாக்கத்துறை அல்ல எனக்கூறினார். தொடர்ந்து, அமலாக்கத் துறை சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜூ தனது வாதத்தை தொடங்கினார்.

அவர், மாநில காவல்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்குகளின் அடிப்படையிலேயே அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்ததாகவும், முறைகேடு நடந்திருப்பதாக கருதினால் அமலாக்கத் துறை விசாரணை நடத்தலாம் எனவும் கூறினார். டாஸ்மாக் ஊழியர்கள் லஞ்சம் வாங்கியதாக முதல் தகவல் அறிக்கையில் உள்ளதாகவும், சிலர் சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக தகவல் கிடைத்ததால் சோதனை நடத்தியதாகவும் அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

டாஸ்மாக் ஊழியர் ஒருவர் லஞ்சம் வாங்கினால் அதன் சங்கிலி என்ன என்பது குறித்து தெரிந்துகொள்ள வேண்டாமா? இதற்கும் உயரதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கிறதா? என தெரிந்துகொள்ள வேண்டமா? இதற்காக தான் தலைமை அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டதாகவும் அமலாக்கத் துறை சார்பில் கூறப்பட்டது. டாஸ்மாக் முறைகேடு மூலம், ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்தது சோதனையில் தெரியவந்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

டெண்டர், மதுபான கொள்முதல் என அனைத்திலும் முறைகேடு நடந்துள்ளதாகவும் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்கப்பட்டதை மேற்பார்வையாளர்களே ஒப்புக்கொண்டுள்ளதாக கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கூறினார். இந்த முறைகேட்டை மறைக்க உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாகவும் அனைத்து ஆவணங்களும் தலைமை அலுவலகத்தில் தான் பாதுகாத்து வைக்கப்படும் என்பதால் அங்கு சோதனை நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான ஆவணங்களும் தலைமை அலுவலகத்தில் உள்ளதாகவும், குறிப்பிட்ட முறையில் தான் விசாரணை நடத்த வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட முடியாது எனவும் அமலாக்கத்துறை சார்பில் வாதிடப்பட்டது.

எந்த முறைகேட்டிலும் ஈடுபடவில்லை என்றாலும் முறைகேடு நடந்ததற்கான ஆவணங்களை மறைப்பதும் குற்றம் தான் எனவும் சம்பந்தப்பட்ட நபர் ஊழல் தடுப்பு வழக்கில் குற்றம் சாட்டபட்டவராக இல்லை என்றாலும் சாட்சியாக அவரை சேர்க்கலாம் எனவும் அமலாக்கத் துறை சார்பில் கூறப்பட்டது.
அமலாக்கத்துறையின் வாதம் நிறைவடையாததை அடுத்து விசாரணை நாளைக்கு தள்ளி வைக்கப்பட்டது.

டாஸ்மாக் மற்றும் தமிழ்நாடு அரசு சார்பில் வாதங்கள் முடிந்து விட்டதால், வரும் 22ம் தேதி எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனிடையே, இந்த வழக்கில் தங்களையும் இணைத்துக் கொள்ளுமாறு பாஜக பிரமுகர் ஏ.மோகன் தாஸ் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களை ஏற்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.