தமிழ்நாடு

கோவை – திருப்பூரில் ரூ.295 கோடியில் புதிய நலத்திட்டங்கள்.. இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்!

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கல் மற்றும் பல்வேறு திட்டப்பணிகள் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கிவைக்கிறார்.

கோவை – திருப்பூரில் ரூ.295 கோடியில் புதிய நலத்திட்டங்கள்.. இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்!
கோவை – திருப்பூரில் ரூ.295 கோடியில் புதிய நலத்திட்டங்கள்.. இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று கள ஆய்வு மேற்கொள்வதுடன் முடிவுற்ற திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வருகிறார். மேலும் கட்சியினருடன் ஆலோசனைகளைச் செய்வதோடு,  மக்களையும் சந்தித்து வருகிறார்.

கடந்த 22, 23 ஆம் தேதி கோவை மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொள்ள இருந்தார். ஆனால் அவருக்குத் திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டதால் இந்த நிகழ்ச்சிகளை அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்ட முதல்வர் வீடு திரும்பிய நிலையில், ஒத்திவைக்கப்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது கோவை சென்றுள்ளார்.

கோவை விமான நிலையத்தில், கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட திமுக உறுப்பினர்கள், உற்சாகமான வரவேற்பை அளித்தனர். பின்னர் அவர் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை நோக்கிப் புறப்பட்டார். அங்கு இரவு 8.50 மணிக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையைத் திறந்து வைத்தார். இரவு உடுமலையில் தங்கி, இன்று காலை 10 மணிக்கு உடுமலை நேதாஜி மைதானத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்றார்.

இந்த விழாவில், வருவாய்த் துறை, ஊராட்சி துறை, மகளிர் திட்டம், தோட்டக்கலைத் துறை, தொழிலாளர் நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் மொத்தம் 19,785 பயனாளிகளுக்கு, ரூ. 295 கோடி 29 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்கி, மேலும், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்தும் உரையாற்றுகிறார்.

நாளைக் காலை 10 மணிக்கு உடுமலை நேதாஜி மைதானத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசுகிறார். பின்னர் பகல் 12 மணிக்குப் பொள்ளாச்சியில் வருகை தரும் மு.க.ஸ்டாலின் அங்குக் காமராஜர், வி.கே.பழனிச்சாமி, கவுண்டர் சுப்பிரமணியம், பொள்ளாச்சி மகாலிங்கம் ஆகியோரது உருவ சிலைகளைத் திறந்து வைக்கிறார்.

பரம்பிக்குளம் ஆழியாறு அணை கட்டுமான பணியின்போது உயிரிழந்த தொழிலாளர்களின் நினைவாகக் கட்டப்பட்ட நினைவரங்கத்தை திறந்து வைக்கிறார். பின்னர் வி.கே.பழனிச்சாமி அரங்கத்தினையும் ரிப்பன் வெட்டித் திறக்கிறார். பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டப் பணிகள் தொடர்பான புகைப்பட கண்காட்சி மற்றும் திட்டத்தின் மாதிரி வடிவத்தைப் பார்வையிடுகிறார்.

நிகழ்ச்சிகள் முடிந்ததும், கோவைக்குத் திரும்பி, அங்கிருந்து சென்னை புறப்பட்டுச் சென்றார். முதலமைச்சரின் வருகையையொட்டி, கோவை நகரில் 500 போலீசாரும், பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 800 போலீசாரும் என மொத்தம் 1,300 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். உடுமலையில் டிரோன் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.

நேற்று மாலை சென்னையிலிருந்து கோவைக்கு வந்த முதலமைச்சருக்கு, உடுமலை மாரியம்மன் கோவில் அருகே கருப்பு – சிவப்பு பலூன்கள், பதாகைகள் ஏந்திய தொண்டர்கள் ஒரு கிலோமீட்டர் நீளத்திற்கு வரிசையாக நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர். வேனில் இருந்த முதலமைச்சர், கைகளை அசைத்து, வணக்கம் தெரிவித்து மக்களுடன் வாழ்த்துப்பகிர்ந்தார். அவருடன் அமைச்சர்கள் மு.பெ. சாமிநாதன், முத்துசாமி, அர. சக்கரபாணி, கயல்விழி மற்றும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் இணைந்திருந்தனர்.