தமிழ்நாடு

யார் சாமி நீ? கழுத்தில் பாம்பு.. கையில் பீர்.. அடாவடி செய்த நபர்

தர்மபுரியில் மதுக்கடைக்கு கழுத்தில் பாம்பை சுற்றிக்கொண்டு வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

யார் சாமி நீ? கழுத்தில் பாம்பு.. கையில் பீர்.. அடாவடி செய்த நபர்
Man with Snake Around Neck Causes Panic at Tasmac Shop in Dharmapuri
தர்மபுரி நகரப்பகுதி நான்கு வழி சாலை அருகில் அரசு மதுபான கடை உள்ளது. நேற்று இரவு இளைஞர் ஒருவர் கழுத்தில் பாம்பு ஒன்றை சுற்றிக்கொண்டு மது வாங்க கடைக்கு வந்ததால், பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர்.

மதுபான கடையில் பணிபுரியும் நபர்கள், செய்வதறியாமல் கழுத்தில் பாம்பினை சால்வை போல் போட்டுக்கொண்டு மது வாங்க வந்த இளைஞரை மதுவினை கொடுத்துவிட்டு இங்கிருந்து உடனடியாக சென்று விடு என எச்சரித்தனர். மதுப்பாட்டிலை வாங்கிக்கொண்டு வந்த, பீர் பாட்டிலை ஓப்பன் செய்து பாம்புக்கும் கொடுத்தார்.

இதனை பார்த்த மற்ற மதுபிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டமாக சேர்ந்து தங்களுடைய போன்களில் வீடியோ எடுக்கத் தொடங்கினர். அனைவரின் பார்வையும் நம் மீது உள்ளது என்பதை உணர்ந்த அந்த நபர், சாலையின் நடுவே சென்று எதிரே வந்த வாகனங்களை மறித்து அடாவடி செயலியில் ஈடுபட்டார். இதனால், சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார்:

சுற்றி நின்று வீடியோ எடுத்தவர்கள் பாம்பிற்கு முத்தம் கொடுங்கள், அப்படி- இப்படி செய்யுங்கள் என கமெண்ட் கொடுக்க இவரும் பாம்பை ஒரு பொருளாக பாவித்து வித்தைகள் காட்டத் தொடங்கினார். இதனையடுத்து போலீசாருக்கு உடனடியாக தகவல் வழங்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், கழுத்தில் பாம்புடன் சுற்றித்திரிந்த நபரை கண்டித்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள தர்மபுரி நகரப்பகுதி நான்கு வழி சாலையில், பாம்புடன் ஒரு நபர் மது வாங்க வந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தியாவில் பெரும்பாலான விஷப் பாம்புகள், வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம், 1972-இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக விஷப் பாம்புகளை, மற்றவர்களுக்குத் தீங்கு விளைவிக்கப் பயன்படுத்துவது இந்திய தண்டனைச் சட்டத்தின் (IPC) கீழ் பல கடுமையான குற்றங்களுக்கு வழிவகுக்கும். இந்தப் பிரிவுகளின் கீழ் கடுமையான அபராதம் மற்றும் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கழுத்தில் பாம்புடன் சுற்றித்திரிந்த நபரை கைது செய்யக்கோரி பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.