தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்திற்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல்..!

சென்னை விமான நிலையத்திற்கு மர்ம நபர்களால் இ-மெயில்கள் மூலம், அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

 சென்னை விமான நிலையத்திற்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல்..!
சென்னை விமான நிலையத்திற்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல்..!
சென்னை விமான நிலைய இயக்குனர் அலுவலகத்திற்கு அதிகாலை மற்றும் காலை என அடுத்தடுத்து மர்ம இ-மெயில் தகவல் வந்தது. அதில் சென்னை விமான நிலைய உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்கள் உள்பட பல இடங்களில் வெடிகுண்டுகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள வெடிகுண்டுகள் வெடித்து சிதறும் என்றும், விமான நிலையத்தை காப்பாற்றிக் கொள்ளுங்கள் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து பரபரப்படைந்த விமான நிலைய அதிகாரிகள், அவசரமாக சென்னை விமான நிலைய இயக்குனர் அலுவலகத்தில் பாதுகாப்பு குறித்த அவசர ஆய்வுக் கூட்டத்தை நடத்தினர். இதில் வெடிகுண்டு நிபுணர்கள், பாதுகாப்பு அதிகாரிகள், சென்னை உள்நாட்டு விமான நிலையம் மற்றும் சர்வதேச விமான நிலையம் வருகை பகுதி, புறப்பாடு பகுதி ஆகிய இடங்களில் உள்ள அனைத்து பகுதிகளில் கேமிராக்களை ஆய்வு செய்தனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன் தொடர்ச்சியாக வந்தது போல் இது வழக்கமான வெடிகுண்டு புரளி என தெரியவந்தது. இது தொடர்பாக சென்னை விமான நிலைய போலீசில் புகார் செய்யப்பட்டது.

சென்னை விமான நிலைய போலீசார் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து, இ மெயில் எந்த ஐடியில் இருந்து வந்தது? என்று ஆய்வு செய்து, வெடிகுண்டு புரளியை கிளப்பிவிட்ட மர்ம அசாமிகளை தேடி வருகின்றனர். இந்த சம்பவம், விமான நிலையத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் பயணிகளிடையே பெரும் பதட்டத்தையும், பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்படுவதையும் ஏற்படுத்தியது.