அரசியல்

அண்ணாமலை பெயர் பலகையை அழித்தது யார்? குழு அமைத்து விசாரணை நடத்த பாஜக முடிவு

அண்ணாமலை பெயர் பலகை கருப்பு மை கொண்டு அழிக்கப்பட்ட சம்பவத்தில் குழு அமைத்து விசாரணை நடத்த பாஜக தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அண்ணாமலை பெயர் பலகையை அழித்தது யார்? குழு அமைத்து விசாரணை நடத்த பாஜக முடிவு
தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு தயாராகும் வகையில் திமுக, பாஜக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் தங்களது கட்சியின் உள்கட்டமைப்பு பணியில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பாஜக மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலைக்கு பதிலாக வேறோரு நபரை தேர்ந்தெடுக்கும் பணியில் பாஜக ஈடுபட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று (ஏப்.11) பாஜக மாநில தலைவருக்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. இதில், நயினார் நாகேந்திரன் விருப்பமனு தாக்கல் செய்தார். பாஜக தலைவர்கள்
அண்ணாமலை, எல்.முருகன், ஹெச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் முன்னிலையில் விருப்பமனு தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து, நயினார் நாகேந்திரன் விருப்ப மனுவில் அண்ணாமலை, எல்.முருகன், ஹெச்.ராஜா உள்ளிட்டோர் கையெழுத்திட்டனர்.

நாகேந்திரனுக்கு மட்டுமே அனுமதி

பாஜக மாநில தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரன் மட்டுமே விருப்ப மனு தாக்கல் செய்துள்ளதாகவும் தமிழக பாஜகவின் புதிய தலைவர் யார்? என நாளை மாலை 4 மணிக்கு அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பான விழாவில் கலந்து கொள்ள டெல்லி தலைவர்கள் நாளை தமிழகம் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுஒருபுறம் இருக்க மறுபுறம் தலைவர் பொறுப்புக்கு விருப்பமனு தாக்கல் செய்ய நயினார் நாகேந்திரனுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டதாகவும் அவரை தவித்து வேறு யாரும் விருப்பமனு தாக்கல் செய்ய வேண்டாம் என உறுப்பினர்களுக்கு பாஜக தலைமை அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

அண்ணாமலை பெயர் பலகை அழிப்பு

இந்நிலையில், சென்னை கமலாயத்தில் உள்ள அண்ணாமலை மாநிலத் தலைவர் என்ற பெயர் பலகை கருப்பு மை கொண்டு அழிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக குழு அமைத்து விசாரணை நடத்த பாஜக தலைமை முடிவு செய்துள்ளதாகவும் அண்ணாமலைக்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்த யாரும் பெயரை அழித்தார்களா? என விசாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.