அரசியல்

திமுக கூட்டணியில் எந்த புகைச்சலும் இல்லை.. அமைச்சர் கே.என்.நேரு

திமுக கூட்டணியில் எந்த புகைச்சலும் இல்லை எனவும் கூட்டணிக்குள் ஏதாவது பிரச்சனை வரவேண்டும் என எதிர்க்கட்சியினர் ஆசைப்படுகிறார்கள் எனவும் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணியில் எந்த புகைச்சலும் இல்லை.. அமைச்சர் கே.என்.நேரு
Minister K.N.Nehru
திருச்சி தெற்கு மாவட்ட திமுக BLA 2 பாக நிலை முகவர்கள் கூட்டம், திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும் பள்ளி கல்வி துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் திமுக முதன்மை செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என். நேரு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் திருச்சி திமுக தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், மணப்பாறை ஆகிய சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த BLA2 பாகநிலை முகவர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், "பாஜகவினர் வாக்கு இயந்திரத்திலும் மோசடி செய்ய கூடிய வகையில் வந்து விட்டார்கள் என ராகுல் காந்தி கூறி வருகிறார். அந்த மோசடி செய்வதை நாம் முறியடிக்க வேண்டும். நம்மை தேர்தல் களத்திற்கு தயார் படுத்தி கொள்ள வேண்டும். தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும். உழைப்பது நாமாக இருப்போம், உதிப்பது உதய சூரியனாக இருக்கட்டும்" என்றார்

இதையடுத்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு, "முதலமைச்சர் ஸ்டாலின் கூட்டணியை அன்போடு அரவணைத்து சிறப்பாக வழி நடத்தி செல்கிறார். எதிரே சேர்ந்துள்ள கூட்டணியை பொருத்தவரை, அமித்ஷா முதலில் தனி அமைச்சரவை என கூறி விட்டு மதுரைக்கு வந்த போது கூட்டணி ஆட்சி என்கிறார். இதனால் தொண்டர்கள் சோர்வடைந்து விட்டனர்.

நம்முடைய கூட்டணி ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளும் கூட்டணியாக உள்ளது. ஆனால் அதிமுக - பாஜக கூட்டணி பொருந்தா கூட்டணியாக உள்ளது. அவர்கள் ஒருவருக்கொருவர் இணைந்து செயல்பட வாய்ப்பில்லை. அதே நேரத்தில் நம் கூட்டணி கடந்த தேர்தல் போலவே இந்த தேர்தலிலும் தேர்தல் பணியாற்றி வெற்றிப்பெறுவோம்.

முருகன் மாநாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கலந்து கொண்டார்கள். அந்த மாநாட்டில் பெரியார், அண்ணா இழிவுபடுத்தப்பட்டார்கள். அதை பார்த்து திமுக கொந்தளித்த பிறகு, அதிமுகவினர் கண்டன அறிக்கை விட்டார்கள். இந்த நிலையில் தான் அதிமுகவினர் இருக்கிறார்கள்" என்றார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு, "எங்கள் கூட்டணி வலுவான கூட்டணி. திமுக கூட்டணியில் புகைச்சல் இல்லை, எங்கும் புகை வரவில்லை. எங்கள் கூட்டணி சுமூகமாக இருக்கிறது. எங்கள் கூட்டணியில் ஏதாவது பிரச்சனை வரவேண்டும் என எதிர்க்கட்சியினர் ஆசைப்படுகிறார்கள். ஆனால் அவர்களுக்குள்ளாக தான் பிரச்சனை இருந்து வருகிறது.கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்வது குறித்து திமுக தலைவர் முடிவெடுப்பார்" எனத் தெரிவித்தார்.