அரசியல்

பாஜகவிடம் நீதிபதி அணி.. வேண்டுகிற தீர்ப்பு கிடைக்கும்: பெ.சண்முகம் குற்றச்சாட்டு

"பாஜக நீதிபதி அணியை உருவாக்கி, தங்களுக்குத் தேவையான உத்தரவுகளை நீதிமன்றம் மூலம் சாதித்துக் கொள்கிறது" என மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் காட்டமாக தெரிவித்துள்ளார்.

பாஜகவிடம் நீதிபதி அணி.. வேண்டுகிற தீர்ப்பு கிடைக்கும்: பெ.சண்முகம் குற்றச்சாட்டு
BJP Manipulating Judiciary Exploiting Devotion for Political Gains-P. Shanmugam
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில், பாஜக அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளைக் கண்டித்தும், தமிழக அரசு மக்கள் நலன் சார்ந்த திட்டங்களைச் செயல்படுத்த வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலம் தழுவிய மக்கள் சந்திப்புப் பிரச்சாரப் பேரணி நடைபெற்றது. பெரியார் சிலையிலிருந்து ஆரணி கூட்டுச்சாலை வரை துண்டுப் பிரசுரங்களை வழங்கி ஊர்வலமாக வந்தனர் மார்க்சிஸ்ட் கட்சியினர். ஆரணி கூட்டுச்சாலையில் நடைபெற்ற மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் முன்னிலையில் பங்கேற்றனர்.

இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்த கருத்துகள் பின்வருமாறு-

பாஜக மற்றும் நீதிமன்றங்கள் குறித்து குற்றச்சாட்டு:

மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் பேசிய மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம், ”பாரதிய ஜனதா கட்சி மற்ற கட்சிகளைப் போல் இல்லாமல், ஆர்.எஸ்.எஸ்.இன் செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்த உருவாக்கப்பட்ட கட்சி என்றும், கார்ப்பரேட் முதலாளிகளின் கனவுகளை நினைவாக்கும் கட்சியாகச் செயல்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் பெரு முதலாளிகளின் எண்ணிக்கையை உயர்த்தியதைத் தவிர வேறு எதுவும் சாதனை செய்யவில்லை. வக்பு வாரியச் சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ளது. பஹல்காம் தாக்குதல் நடைப்பெற்ற இரண்டு மாதங்களுக்குப் பிறகு பிரதமர் மோடி பாலம் திறப்பதற்காகச் சென்றாரே தவிர, தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறக்கூடச் செல்லவில்லை," என்று கூறினார்.

மேலும், பாஜக, நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து உத்தரவு பெறுவதற்குக் காரணம் உள்ளதாக சண்முகம் தெரிவித்தார். "பாரதிய ஜனதா கட்சி பல்வேறு கட்சிகளைப் போல விளையாட்டு அணி, வழக்கறிஞர் அணி என இல்லாமல் புதிதாக நீதிபதிகள் அணியை உருவாக்கியுள்ளனர். இதன் மூலமே தங்களுக்குத் தேவையான உத்தரவுகளைத் தகுந்த நீதிபதிகளைக் கொண்டு சாதித்துக்கொள்கின்றனர்," என்று அவர் குற்றம் சாட்டினார்.

முருகன் பக்தர்கள் மாநாடு மற்றும் ரவுடிகள் குறித்த கருத்துகள்

மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாடு குறித்துப் பேசிய சண்முகம், "அது தானாகச் சேரும் கூட்டம் அல்ல, திரட்டப்படும் கூட்டம். ரயில் சேவை, பேருந்து சேவை எனப் பல்வேறு வசதிகளைச் செய்து கொடுத்து, 'நீங்கள் வந்தால் மட்டும் போதும்' என்கிற வகையில் முருக பக்தர்கள் மாநாடு நடத்துகின்றனர்," என்றார்.

பாஜகவில் ரவுடிகளின் எண்ணிக்கை குறித்தும் அவர் விமர்சித்தார். "முருக பக்தர்கள் மாநாடு பக்தர்களால் நிரம்ப வேண்டுமே தவிர, பாரதிய ஜனதா கட்சியில் ரவுடிகளின் எண்ணிக்கை எவ்வளவு என்று அண்ணாமலையைக் கேட்டாலே கூறிவிடுவார். அவர் (அண்ணாமலை) ஐபிஎஸ் பதவியில் இருக்கும்போது பிடித்த குற்றவாளிகளை விட பாரதிய ஜனதா கட்சியில் ரவுடிகளின் எண்ணிக்கை அதிகம்," என்று சண்முகம் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.

பாமக மற்றும் கொடிக்கம்பங்கள் குறித்த நிலைப்பாடு

பாமகவின் உட்கட்சி விவகாரங்கள் குறித்துப் பேசிய சண்முகம், "பாமகவைப் பொறுத்தவரை தந்தையும் மகனும் பொறுப்பாளர்களை நீக்கி நீக்கி விளையாடி வருகின்றனர். இது உட்கட்சி விவகாரம்; அவர்களே பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

தமிழகத்தில் கொடிக்கம்பங்கள் அகற்றுவதை எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது குறித்தும் அவர் விளக்கினார். "நீதிபதிகளுக்கு வரன்முறை மீறி அதிகாரம் கொடுத்தது எவ்வாறு? முக்கிய சாலை சந்திப்புகளில் போக்குவரத்துக்கு இடையூறான கம்பங்களை அகற்றுவதை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், கிராமப்புறங்களிலும் கொடிக்கம்பங்கள் இருக்கக் கூடாது என்பது எவ்வகையில் நியாயம்? எனவே தான் மார்க்சிஸ்ட் வழக்குத் தொடுத்து போராடி வருகிறது," என்று சண்முகம் தெரிவித்தார்.