இந்தியா

கேரளாவில் அதிர்ச்சி: மனைவியை கொன்று ஃபேஸ்புக்கில் லைவ் செய்த கணவன் கைது!

தனது மனைவியை கொலை செய்துவிட்டு அதை ஃபேஸ்புக் லைவில் அறிவித்த கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

கேரளாவில் அதிர்ச்சி: மனைவியை கொன்று ஃபேஸ்புக்கில் லைவ் செய்த கணவன் கைது!
Husband killed his wife and announced it on Facebook Live
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் புனலூரில், மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன், அந்த சம்பவத்தை ஃபேஸ்புக் லைவ் மூலம் அறிவித்துவிட்டு காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொடூர கொலை

புனலூரைச் சேர்ந்த ஐசக் (45) மற்றும் அவரது மனைவி ஷாலினி (39) ஆகிய இருவருக்கும் இரண்டு மகன்கள் உள்ளனர். கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக, ஷாலினி தனது தாயார் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், இன்று காலை 6 மணியளவில் ஷாலினியின் வீட்டிற்குச் சென்ற ஐசக், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை சரமாரியாகக் குத்தி கொலை செய்துள்ளார். இந்தத் தாக்குதலில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ஷாலினி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கொலை செய்தபின் ஃபேஸ்புக் லைவ்

மனைவியைக் கொலை செய்த பிறகு, அங்கிருந்து தப்பிச் சென்ற ஐசக், தனது செல்போனில் ஃபேஸ்புக் லைவ் வீடியோ மூலம் இந்தக் கொலையை தானே செய்ததாக தெரிவித்துள்ளார். பின்னர், புனலூரில் உள்ள காவல் நிலையம் சென்று போலீசாரிடம் சரணடைந்தார்.

இந்தச் சம்பவம் குறித்து புனலூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொல்லம் ரூரல் எஸ்.பி. விஷ்ணு பிரதீப் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தார். தடயவியல் நிபுணர்களும் வந்து சோதனை நடத்தியுள்ளனர்.