இந்தியா

நீட் தேர்வு: மதிப்பெண் குறைந்ததால் மகளை அடித்து கொன்ற தந்தை!

மகாராஷ்டிர மாநிலத்தில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவி, நீட் பயிற்சி தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால், கோபமடைந்த அவரது தந்தை கடுமையாக தாக்கியதில் உயிரிழந்தார்.

நீட் தேர்வு: மதிப்பெண் குறைந்ததால் மகளை அடித்து கொன்ற தந்தை!
Father beats daughter to death because she got low marks
மகாராஷ்டிர மாநிலம், சாங்கிலி மாவதில் உள்ள நெல்கரஞ்சி கிராமத்தில் வசித்து வருபவர் தோண்டிராம் போஸ்லே (45). இவர் அருகில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் சாதனா வேறொரு பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். சாதனா 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் 92.60 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இதனால் அவரை மருத்துவராக்கிவிட வேண்டும் என தந்தை தோண்டிராம் முனைப்புடன் இருந்துள்ளார். எனவே 12 ஆம் வகுப்போடு மருத்துவப் படிப்புகளுக்கான நீட் இளநிலை தேர்வுக்கும் சாதனா தயாராகி வந்தார்.

இந்த நிலையில், சாதனாவின் பள்ளியில் சமீபத்தில் நடைபெற்ற நீட் பயிற்சி தேர்வு நடைபெற்றுள்ளது. இதில் அவர் குறைவான மதிபெண் பெற்றுள்ளார். இதனால் கோபமடைந்த தந்தை தோண்டிராம், மகளை கடுமையாக திட்டியுள்ளார். மேலும், மகள் சாதனாவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், தோண்டிராம் ஆட்டுக்கல் குழவியின் கட்டையை கொண்டு கொடூரமாக தாக்கியுள்ளார்.

சாதனாவின் தாய் மற்றும் சகோதரன் தோண்டிராமை தடுக்க முயன்றபோது, அதனை பொருட்படுத்தாமல் தாக்கியுள்ளார். இதனால் சாதனாவின் உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, மறுநாள் குளியலறைக்கு சென்ற சாதனா திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனை கண்ட குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனைதொடர்ந்து, சிறுமி சாதனாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது. இதில், பலத்த காயங்கள் காரணமாக அவர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, சாதனாவின் தாயார் அளித்த புகாரின் பேரில் தோண்டிராமை போலீசார் கடந்த 22 ஆம் தேதி கைது செய்துள்ளனர். தற்போது அவர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.