இந்தியா

டெல்லியில் கொடூரம்: ரீல்ஸ் விவகாரத்தில் மனைவி கழுத்தை நெரித்து கொலை!

இன்ஸ்டாகிராமில் ரீலிஸ் பதிவிட்ட மனைவியை கொலை செய்த கணவன், தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் கொடூரம்: ரீல்ஸ் விவகாரத்தில் மனைவி கழுத்தை நெரித்து கொலை!
Delhi man strangles wife to death over reels
சமூக வலைத்தளங்களில் அதிக நேரம் செலவழித்து இன்ஸ்டாகிராமில் 'ரீல்ஸ்' வீடியோக்களை பதிவிட்ட தகராறில் மனைவியை கொலை செய்துவிட்டு கணவன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச தம்பதி

உத்தரப் பிரதேசத்தின் பிலிபித்தைச் சேர்ந்த அந்தத் தம்பதி, கடந்த ஏப்ரல் மாதம் முதல் டெல்லியின் ஓல்ட் ரோஷன்புராவில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். உயிரிழந்த பெண் (30), இன்ஸ்டாகிராமில் சுமார் 6,000 பின்தொடர்பவர்களைக் கொண்ட பிரபலமாக இருந்துள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. கணவரான அமன், இ-ரிக்‌ஷா ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 9 மற்றும் 5 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர்.

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் காரணமாக தகராறு

இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப்பில் மிகவும் சுறுசுறுப்பாக இருந்த அந்தப் பெண், தொடர்ந்து 'ரீல்ஸ்' வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்துள்ளார். இதற்கு அவரது கணவர் அமன் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி கடுமையான சண்டைகள் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

மனைவி கொலை மற்றும் கணவர் தற்கொலை முயற்சி

இந்த நிலையில், கடந்த 1 ஆம் தேதி அதிகாலை கணவன் மனைவி இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், அமன் தனது மனைவியைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். இந்தக் கொடூரச் சம்பவத்திற்குப் பிறகு, அமன் விஷமும் குடித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்த சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

கொலை செய்யப்பட்ட பெனின் உடலை மீது பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்த போலீசார், அமனை உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

மேலும் சில சம்பவங்கள்

இதேபோன்ற ஒரு சம்பவம் இரண்டு நாட்களுக்கு முன்பு காசியாபாத்தில் நடந்தது. அதில், தனது மனைவி ஆபாசமான ரீல்ஸ் செய்வதை தடுத்ததால், மனைவி தன்னை கத்தியால் தாக்கியதாக ஒரு கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

நொய்டாவில் நடந்த வரதட்சணைக் கொலை வழக்கிலும், நிக்கி என்ற பெண் தனது கணவரால் எரித்துக் கொல்லப்பட்டார். வரதட்சணை சண்டை தவிர, நிக்கி இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் செய்தது இருவருக்கும் இடையே சண்டையை ஏற்படுத்தியதும் ஒரு காரணம் என்று காவல்துறை தரப்புகள் தெரிவித்துள்ளன.