ஆடிக்கிருத்திகை.. தெப்பத்திருவிழாவிற்கு தயாராகும் திருத்தணி.. சேகர்பாபு சொன்ன குட்நியூஸ்
Aadi Kiruthigai Theppam Festival 2024 : திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் ஆடிக்கிருத்திகை தெப்பத் திருவிழா நிகழ்வை முன்னிட்டு சரவண பொய்கை திருக்குளத்தில் தெப்பம் கட்டப்பட்டுள்ளது.
Aadi Kiruthigai Theppam Festival 2024 : ஆடிக்கிருத்திகை திருவிழா திருத்தணி முருகன் கோவிலில் 5 நாட்கள் நடைபெற உள்ளது. மூன்று நாட்கள் தெப்பத்திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு தெப்பம் கட்டும் பணி நிறைவடைந்துள்ளது.சிறப்பு தரிசனத்திற்கான 200 ரூபாய் கட்டணம் ரத்து செய்யப்பட்டு 100 ரூபாய் மட்டுமே வசூல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை திருக்கோயிலாகும். இந்த திருக்கோயில் வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் ஆடி கிருத்திகை தெப்ப திருவிழா நிகழ்ச்சி வருடத்திற்கு ஒருமுறை ஐந்து நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான ஆடிக்கிருத்திகை திருவிழா வரும் 27ஆம் தேதி தொடங்குகிறது
ஜூலை 29 ஆடிக்கிருத்திகை நாள் முதல் மலைக்கோயில் அடிவாரத்தில் உள்ள சரவண பொய்கை திருக்குளத்தில் தெப்பத்தில் எழுந்தருளி முருகப்பெருமாள் அருள்பாலிப்பார். சரவண பொய்கை திருக்குளத்தில் இந்த நிகழ்ச்சிக்காக தெப்பம் கட்டும் நிகழ்வை மேற்கொள்ளும் மீனவ சமுதாய மக்கள் அழகான தெப்பத்தை வடிவமைத்துள்ளனர். தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் திருக்கோயில் அதிகாரிகள் மேற்பார்வையில் இந்த தெப்பம் கட்டும் நிகழ்வு இறுதி நிலையை அடைந்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் 8 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்தும் வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள், குடிதண்ணீர், போக்குவரத்து, சுகாதாரம், மருத்துவம், போன்ற அனைத்து ஏற்பாடுகளும் திருக்கோயில் சார்பில் ஏற்பாடு செய்வதற்கான முன்னேற்பாடுகள் அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் மலைக்கோயில் நடைபெற்றது
இந்த கூட்டத்திற்கு இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு, கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி, ஆகியோர் பங்கேற்றனர்.
காவல்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள், மருத்துவத்துறை அதிகாரிகள், தீயணைப்பு துறை அதிகாரிகள், என 20 துறை அதிகாரிகளுக்கு பக்தர்கள் சார்ந்த நலன் சார்ந்த முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினார்கள்.
5 நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சியில் 2000 போலீசார் பாதுகாப்பு பணியிலும், 400 கண்காணிப்பு கேமராக்களும், ஐந்து நாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் பக்தர்களுக்கு தொடர் அன்னதானமும், 400 ஒரு சிறப்பு பேருந்துகளும், சென்னையில் இருந்து சிறப்பு ரயில்களும் இந்த நிகழ்ச்சியில் இயக்கப்பட உள்ளன, மேலும் விசேஷ நாட்களில் 200 ரூபாய் கட்டண வழி தரிசனத்தில் பக்தர்கள் தரிசனம் செய்து வந்தனர் இது ரத்து செய்யப்பட்டு, இனிமேல் விசேஷ நாட்களில் 100 ரூபாய் கட்டண வழி தரிசனம் மட்டுமே சிறப்பு தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
இந்த ஆய்வு கூட்டத்தின் போது இந்து சமய அறநிலைத்துறை செயலாளர் சந்திரமோகன், இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் ஸ்ரீதரன், அரசு கூடுதல் ஆணையர் டாக்டர் சுகுமார், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிரபு சங்கர், திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ். சந்திரன், திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள், மற்றும் மாவட்ட மருத்துவ துறை அதிகாரிகள் திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் ஸ்ரீதரன், பொறுப்பு இணை ஆணையர் அருணாசலம், வருவாய் கோட்டாட்சியர் தீபா, திருத்தணி காவல் துறை டி.எஸ்.பி விக்னேஷ் தமிழ்மாறன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கோ.மோகனன், வி. சுரேஷ்பாபு, உஷாரவி, மற்றும் பலர் உடன் இருந்தனர்.
இதே போல கோவை மருதமலை சுப்பிரமணி சாமி திருக்கோவில் ஆடி கிருத்திகை வருகிற 28 முதல் 30 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.மலைக் கோயிலுக்கு இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்லவும் மலைப் பாதையில் நடைபாதையாக செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை.மலை பாதை படிக்கட்டுகள் வழியாகவும், திருக்கோவில் பேருந்து மற்றும் திருக்கோவில் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ள பேருந்துகள் மலை கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்யலாம். இதற்கான ஏற்பாடுகள் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் செய்து வருவதாக செயல அலுவலர் செந்தில்குமார் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
What's Your Reaction?