உலகம்

லெபனானில் தொடரும் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 1,953 ஆக உயர்வு!

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் தீவிரமடைந்து வருவதால் அங்கு உயிரிழப்புகள் 2,000-ஐ நெருங்கியுள்ளன.

லெபனானில் தொடரும் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 1,953 ஆக உயர்வு!
Lebanon
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே கடந்த ஏப்ரல் 7-ஆம் தேதி முதல் இரண்டு வாரங்களுக்குப் போர்நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. இருப்பினும், இந்த போர்நிறுத்தம் ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர்களுக்குப் புகலிடம் அளிக்கும் லெபனானுக்குப் பொருந்தாது என இஸ்ரேல் அறிவித்துள்ளது. இதன் காரணமாக, மார்ச் 2-ஆம் தேதி முதல் லெபனான் மீது இஸ்ரேல் நடத்தி வரும் வான்வழி மற்றும் தரைவழித் தாக்குதல்கள் தடையின்றித் தொடர்கின்றன. இதில் இதுவரை 1,953 பேர் உயிரிழந்துள்ளனர்; 6,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

போர்நிறுத்த குழப்பமும் ஈரான் நிலைப்பாடும்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், லெபனானை இந்தப் போர்நிறுத்தத்திலிருந்து விலக்கி வைத்துள்ள நிலையில், அமைதிப் பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தம் செய்த பாகிஸ்தானும் ஈரானும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த ஒப்பந்தம் லெபனானுக்கும் பொருந்தும் என அவை வாதிடுகின்றன. குறிப்பாக, ஏப்ரல் 7-ஆம் தேதி போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பின்னரும், அடுத்த ஒரே நாளில் (ஏப். 8) நடத்தப்பட்ட தாக்குதல்களில் மட்டும் 357 பேர் உயிரிழந்துள்ளதாகத் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏப்ரல் 14-ல் முக்கியப் பேச்சுவார்த்தை

லெபனானில் அதிகரித்து வரும் உயிரிழப்புகளைக் கருத்தில் கொண்டு, வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தைக்கு இரு நாடுகளும் தற்போது ஒப்புக்கொண்டுள்ளன. அதுவரை இஸ்ரேல் தனது தாக்குதல்களைக் குறைத்துக் கொள்ளுமா அல்லது தீவிரப்படுத்துமா என்பது உலக நாடுகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.