தமிழ்நாடு

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழப்பு.. 6 காவலர்கள் பணியிடை நீக்கம்!

சிவகங்கையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் 6 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், கடை அடைப்பு உள்ளிட்ட அடுத்த சம்பவங்களால் மடப்புரத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழப்பு.. 6 காவலர்கள் பணியிடை நீக்கம்!
விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழப்பு.. 6 காவலர்கள் பணியிடை நீக்கம்!
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு நேற்று முன்தினம் திருமங்கலத்தைச் சேர்ந்த சிவகாமி, என்பவர் தனது மகளுடன் தரிசனம் செய்ய வந்திருந்தார். சிவகாமியால் நடக்க முடியாத நிலையில் கோயில் தற்காலிக ஊழியர் அஜித்குமார், வீல்சேர் கொண்டு வந்து கொடுத்துள்ளார். அப்போது கார் சாவியை அஜித்திடம் கொடுத்த பெண்கள் காரை பார்க் செய்யுமாறு கூறியிருக்கிறார்.

சாமி தரிசனம் முடிந்து காரில் புறப்பட்ட போது காரின் பின் சீட்டில் கட்டைப்பையின் அடியில் வைத்திருந்த பத்து பவுன் தங்க நகை மாயமாகியுள்ளது. இதுகுறித்து சிவகாமி திருப்புவனம் காவல்துறையில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் போலீசார் அஜித் உள்ளிட்ட சிலரிடம் விசாரணை செய்துள்ளனர். அஜித்திடம் விசாரணை செய்த போது மயங்கி விழுந்ததாகவும், உடனே அவரை திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து மருத்துவர்கள் பரிசோதனை செய்த போது உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், உயிரிழந்த அஜித் குமாரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் தாக்கியதால் தான் அஜித்குமார் உயிரிழந்ததாகவும், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கடை அடைப்பு போராட்டமும் நடைபெற்றது.

இதனிடையே திருப்புவனம் காவல்நிலையத்தில் பணிபுரிந்த குற்றப்பிரிவு தனிப்படை காவலர்கள் கண்ணன், பிரபு, சங்கர மணிகண்டன், ராஜா, ஆனந்த், ராமச்சந்திரன் உள்ளிட்ட 6 பேரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட எஸ்.பி ஆஷித் ரவத் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில், அஜித் குமார் பைப்பால் தாக்கப்பட்டதாகவும், பைப்பின் துண்டுகள் காவல் நிலையத்தின் பின்புறம் சிதறி கிடப்பதாகவும் உறவினர்கள் குற்றம்சாட்டியிருக்கின்றனர்.