தமிழ்நாடு

பெண்கள் பாதுகாப்பு: தனிநபர்களின் செயல்களால் பிரச்னை.. சபாநாயகர் அப்பாவு

தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது என்றும், சில தனிநபர்களின் தவறான செயல்கள் தான் பிரச்னையாக இருக்கிறது என்று சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.

பெண்கள் பாதுகாப்பு: தனிநபர்களின் செயல்களால் பிரச்னை.. சபாநாயகர் அப்பாவு
தனிநபர்களின் செயல்களால் பிரச்னை - சபாநாயகர் அப்பாவு
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் கட்டப்பட்டுள்ள புதிய நூலகத்தை சபாநாயகர் அப்பாவு இன்று திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், "வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்தும் புதிய முயற்சியை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் முன்னெடுத்துள்ளார். பொதுமக்கள் காத்திருக்கும் இடங்களில் வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்தும் நோக்கில், ரூ.300 கோடி செலவில் மருத்துவமனைகள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் என 100 பொது நூலகங்களை அமைக்க உத்தரவிட்டுள்ளார்.

அதன் ஒரு பகுதியாக, திருநெல்வேலி சித்த மருத்துவமனையில் இந்த நூலகம் தொடங்கப்பட்டுள்ளது. நோயாளிகள் மருத்துவரைச் சந்திக்கக் காத்திருக்கும் நேரங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த நூலகம் செயல்பட்டும்" என்றார்.

மேலும், தாம்பரம் மாணவி பாலியல் கொடுமை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "இத்தகைய சம்பவங்கள் மிக தவறானவை. தமிழகத்தில் 41% பெண்கள் வேலைக்குச் செல்லும் நிலையில் பேருந்துகள், பணிபுரியும் இடங்களில் பெண்களுக்குப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பெண்களுக்குப் பாதிப்போ, பிரச்சனைகளோ இல்லை. சில தனிநபர்களின் தவறான செயல்களால் பெண்களுக்கு எதிரான குற்றம் நடக்கின்றன. அதனை அரசு வேடிக்கை பார்க்காது. அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை போன்று கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகம் ஒரு அமைதிப் பூங்கா, ஓரிரு சம்பவங்களை வைத்து ஒட்டுமொத்தமாக மாநிலத்தைக் குறை கூறக்கூடாது" என்றார்.

சென்னையில் போதைப்பொருள் புழக்கம் குறித்த கேள்விக்கு, "தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும், போதை இல்லாத தமிழகத்தை உருவாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. பாஜக ஆளும் மாநிலங்களில் இருந்துதான் கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் தமிழகத்திற்கு வருகிறது. அவை தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படவில்லை. குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்களை அரசு கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த ஆட்சியில் கூலிப்படை கலாச்சாரம் இருந்தது. ஆனால் திமுக அரசு வந்த பிறகு கூலிப்படைகள் அடைக்கப்பட்டுள்ளது. மேலும், பத்திரிகையாளர்கள் சொல்வதைக் கேட்டு காவல்துறை உடனடி நடவடிக்கை எடுத்து வருகிறது" என்றார்.

புதிய கல்விக் கொள்கையின் அடிநாதத்தில் திருவள்ளுவரும் திருக்குறளும் இருக்கிறது என ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்துக்கு, "அறிவை வளர்ப்பதற்காகவே புதிய கல்வி கொள்கை என்று கூறுவதாக இருந்தால், பிரிட்டிஷ் காலத்தில் உருவாக்கப்பட்ட ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டியது தானே? அம்பேத்கர் கொண்டு வந்த இந்திய அரசியலமைப்புச் சட்டப்படியே ஆளுநர் நடக்க வேண்டும். ஆர்எஸ்எஸ் மற்றும் சனாதன சித்தாந்தத்தை நடைமுறைப்படுத்தவே புதிய கல்விக் கொள்கை கொண்டுவரப்படுகிறது" என்றார்.

திமுக கூட்டணி குறித்து கேட்டபோது, "திமுக கூட்டணியில் பதட்டப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஏற்கனவே உள்ள திமுக கூட்டணி 7 தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளது. வரும் தேர்தலிலும் வெற்றி பெறப்போகிறோம் என்ற நம்பிக்கையில் நிறை குடமாக திமுக இருக்கிறது" என்றார்.

இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் 29 கோடி பேர் வறுமைக்கோட்டுக்கு கீழ் இருந்தார்கள். தற்போது 5 கோடி பேர் தான் உள்ளார்கள் என்ற உலக ஆய்வு அறிக்கை குறித்து கேட்டபோது, "இது உண்மைக்குப் புறம்பான செய்தி. இதனை ஊடகங்கள் மூலமாக மத்திய அரசு பரப்ப வைக்கிறது. எந்தப் புள்ளிவிவரத்தின் அடிப்படையில் இதை கூறுகிறீர்கள். 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பு இதுவரை எடுக்கப்படவில்லை.
மக்கள் தொகை கணக்கெடுப்பை முதலில் எடுத்துவிட்டு, பிறகு இதுபோன்ற கணக்கெடுப்புகளை எடுக்க வேண்டும். பொய்யான விமர்சனங்களை இட்டுக்கட்டி ஊடகங்கள் மூலம் மத்திய பாஜக அரசு பரப்புகிறது என்றார்.

மேலும் பேசிய அவர், "மகளிர் உரிமைத்தொகை ஒரு கோடியே 15 லட்சம் பேருக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வருகிறது. இன்னும் பல பேருக்கு வழங்கப்படும். தகுதி நிர்ணயத்தின் அடிப்படையில் பொருளாதார நிலையை அறிந்து ஒரு கோடியே 15 லட்சம் பேருக்கு வழங்கப்படுகிறது. விடுபட்டவர்களுக்கும் விரைவில் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும்" என்று உறுதியளித்தார்.