தமிழ்நாடு

தாமதமான அங்கீகாரமே இது.. கமல்ஹாசனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து..!

ஆஸ்கர் விருதுக்கான குழுவில் இணைய அழைப்பு பெற்றிருக்கும் நடிகர் கமல்ஹாசனுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தாமதமான அங்கீகாரமே இது.. கமல்ஹாசனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து..!
CM Stalin and Kamal Haasan
ஆஸ்கர் விருதுகளை வழங்கக்கூடிய அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS) 2025 ஆம் ஆண்டு உறுப்பினராக இணைய நடிகர் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த அழைப்பு, அவர் திரையுலகிற்கு ஆற்றிய பங்களிப்புகளை அங்கீகரிக்கும் விதமாக வழங்கப்பட்டுள்ளது.

கமல்ஹாசன் உட்பட 534 கலைஞர்கள் மற்றும் திரைப்படத் துறை வல்லுநர்கள் இந்த ஆண்டு உறுப்பினராக இணைய அழைக்கப்பட்டுள்ளனர். கமல்ஹாசன் மட்டுமின்றி இந்தியாவை சேர்ந்த பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா, இயக்குனர் கரண் மாலி, ஆடை வடிவமைப்பாளர் மாக்சிமா பாசு, ஒளிப்பதிவாளர் ரன்பீர் தாஸ் உள்பட பலருக்கு உறுப்பினர்களாக சேர ஆஸ்கர் அகாடமி அழைப்பு விடுத்து இருக்கிறது.

ஆஸ்கர் அகாடமியின் இந்த அழைப்பை கமல்ஹாசன் ஏற்றால், அவர் ஆஸ்கர் விருதுகளுக்கான வாக்கெடுப்பில் பங்கேற்கும் உரிமை பெறுவார். இந்த அழைப்பு கமல்ஹாசனுக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த இந்திய சினிமாவுக்கே பெருமை சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது.

இந்த அழைப்பை தொடர்ந்து, திரையுலகினரும் அரசியல் தலைவர்களும் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “உலக அளவில் திரைத்துறையின் உச்சபட்ச விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுக்கான குழுவில் இணைய அழைப்பினைப் பெற்றிருக்கும் அன்பு நண்பர் - கலைஞானி கமல்ஹாசனுக்கு என் வாழ்த்துகள்!

மொழி - தேச எல்லைகளைக் கடந்து திரைத்துறையினர் மீது தாங்கள் செலுத்திய பெரும் தாக்கத்துக்கான தாமதமான அங்கீகாரமே இது. இன்னும் பல தேடி வரும் உயரம் தங்களுடையது!

இதனைத்தொடர்ந்து முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த நடிகர் கமல்ஹாசன், “ஆஸ்கர் அமைப்பின் அழைப்பு ஒரு மகிழ்வென்றால் தமிழ்நாடு முதலமைச்சரின் வாழ்த்துச் சொற்கள் மேலும் மகிழ்வு. மிக்க நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.