தமிழ்நாடு

ஸ்டார்ட் அப் வளர்ச்சியில் தமிழ்நாடு முதலிடம் - அமைச்சர் அன்பரசன் பெருமிதம்!

புத்தொழில் நிறுவனங்களை (ஸ்டார்ட் அப்) ஊக்குவிப்பதில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது என அமைச்சர் தா.மோ.அன்பரசன் பெருமிதம் தெரிவித்தார். அக். 9 மற்றும் 10 தேதிகளில் கோவையில் நடக்கும் உலகப் புத்தொழில் மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

ஸ்டார்ட் அப் வளர்ச்சியில் தமிழ்நாடு முதலிடம் - அமைச்சர் அன்பரசன் பெருமிதம்!
ஸ்டார்ட் அப் வளர்ச்சியில் தமிழ்நாடு முதலிடம் - அமைச்சர் அன்பரசன் பெருமிதம்!
புத்தொழில் நிறுவனங்களை (ஸ்டார்ட் அப்) ஊக்குவிப்பதில் தமிழ்நாடு தற்போது இந்தியாவிலேயே முதல் இடத்தில் இருப்பதாகச் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பெருமிதம் தெரிவித்தார். மேலும், கோவையில் நடைபெறவுள்ள உலகப் புத்தொழில் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் என்றும் அவர் அறிவித்தார்.

தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் சார்பில் கோவையில் வருகிற அக்டோபர் 9 மற்றும் 10ஆம் தேதிகளில உலகப் புத்தொழில் மாநாடு நடைபெறவுள்ளது. இது குறித்த முன்னேற்பாடுப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் அன்பரசன், தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

புத்தொழில் துறையில் புரட்சி:

கடந்த ஆட்சியில் புத்தொழில் வளர்ச்சிக்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால், தற்போதைய தி.மு.க ஆட்சியில் டான்சீட் நிதி உதவித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களால் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றன" என்று அமைச்சர் கூறினார். 2021ஆம் ஆண்டு 232 ஆக இருந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை, தற்போது 12,000-ஐ கடந்துள்ளதாக அவர் தெரிவித்தார். இதுவரை 212 ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் அரசு ரூ.79.40 கோடி முதலீடு செய்துள்ளது. இதன் விளைவாக, அந்த நிறுவனங்கள் வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.554.49 கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளதோடு, ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பையும் உருவாக்கியுள்ளன.

எம்.எஸ்.எம்.இ-க்கு நிதியுதவி:

சிறு மற்றும் குறுந்தொழில்கள் எதிர்கொள்ளும் மின்சாரக் கட்டணச் சுமையைக் குறைப்பதற்காக, தமிழக அரசு வருடத்திற்கு ரூ.250 கோடி மின்சார கட்டணச் சலுகையை ஏற்று வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். மேலும், இயந்திரங்களுக்கு வழங்கப்படும் மானியமானது அண்ணல் அம்பேத்கர் திட்டத்தின் கீழ் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் விளக்கமளித்தார். கடந்த பத்து ஆண்டுகளில் 52,000 தொழில் முனைவோர்கள் மட்டுமே உருவாக்கப்பட்ட நிலையில், கடந்த நான்கு ஆண்டுகளில் 60,000க்கும் மேற்பட்டோர் உருவாக்கப்பட்டு உள்ளனர் என்றும் அமைச்சர் பெருமிதம் தெரிவித்தார்.

உடனடி நடவடிக்கைக்கு உறுதி:

சிறு தொழில்களுக்கு உரிமம் பெறுவது, மின் இணைப்பு பெறுவது போன்ற அத்தியாவசியப் பணிகளில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்துத் தெரிவித்தால், எங்கெல்லாம் குற்றச்சாட்டு வருகிறதோ அங்கெல்லாம் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உறுதியளித்தார். இதற்காக 2.0 மனுக்கள் வழியாகப் பெறப்பட்ட பல பிரச்சனைகள் ஏற்கனவே தீர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதற்கிடையில், ஜி.எஸ்.டி. வரி குறைப்பின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய ஒரு வாரம் ஆகும் எனவும், எம்.எஸ்.எம்.இ. பிரச்சனைகள் மத்திய அரசிடம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பதிலளித்தார்.