தமிழ்நாடு

பாலியல் தொல்லை வழக்கு...மதபோதகர் ஜான் ஜெபராஜின் உறவினரும் கைது

சிறுமிகள் இருவரும் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெனட் ஹரிஸ் கைது செய்யப்பட்டு உள்ளார் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

பாலியல் தொல்லை வழக்கு...மதபோதகர் ஜான் ஜெபராஜின் உறவினரும் கைது
போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பெனட் ஹரிஸ்

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை

தென்காசி மாவட்டம், செங்கோட்டை தாலுகா வல்லம் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் ஜெபராஜ். இவர் கோவை ஜி.என் மில்ஸ் பகுதியில் தங்கி இருந்து காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் உள்ள ஆலயத்தில் கிறிஸ்தவ மத போதகராக இருந்து வந்தார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் ஜான் ஜெபராஜ் வீட்டில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் 17 வயது சிறுமி மற்றும் அவருடைய தோழியான 14 வயது சிறுமிக்கு ஜான் ஜெபராஜ் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

மேலும் ஒருவர் கைது

இது குறித்து கோவை, காட்டூரில் உள்ள மாநகர மத்திய அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கேரளா மாநிலம் மூணாறு பகுதியில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் பதுங்கி இருந்த மதபோதகர் ஜான் ஜெபராஜ் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

இதனிடையே சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஜான் ஜெபராஜ் உறவினரான கோவை துடியலூர் பகுதியைச் சேர்ந்த பெனட் ஹரிஸ் என்பவரை கோவை மாநகர மத்திய அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதுகுறித்து காவல் துறை தரப்பில், சிறுமிகள் இருவரும் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெனட் ஹரிஸ் கைது செய்யப்பட்டு உள்ளார் என தெரிவித்தனர்.