தமிழ்நாடு

Rain Alert: தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இன்று தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Rain Alert: தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
TN Rain Update

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. புதுக்கோட்டை, திருநெல்வேலி, மதுரை, திருச்சி, தருமபுரி, உள்ளிட்ட மாவட்டங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் நேற்று மிதமான மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் நீங்கி நின்றது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி

இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள பல்வேரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்ட செய்தி குறிப்பில், தெற்கு கடலோர ஆந்திர பிரதேசத்தில் இருந்து, கடலோர தமிழகம் வழியாக வடக்கு இலங்கை வரை வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று (ஆகஸ்ட் 9) அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல், வரும் 10 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கனமழைக்கான வாய்ப்பு

தமிழகத்தில் இன்று தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை வானிலை மற்றும் மீனவர்களுக்காக எச்சரிக்கை

சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

இன்று முதல் வரும் 12 ஆம் தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே, அப்பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.