தமிழ்நாடு

போக்குவரத்து துறையில் இளநிலை பொறியாளர்கள் நியமனத்திற்கு எதிரான மனு தள்ளிவைப்பு!

செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில் நியமிக்கப்பட்ட இளநிலை பொறியாளர்கள் நியமனத்தை செல்லாது என அறிவிக்கக் கோரிய மேல் முறையீட்டு மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது.

போக்குவரத்து துறையில் இளநிலை பொறியாளர்கள் நியமனத்திற்கு எதிரான மனு தள்ளிவைப்பு!
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் இளநிலை பொறியாளர் மற்றும் உதவிப் பொறியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று கடந்த 2014 ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது.

இந்தத் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி வழக்கு பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர், தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களை விசாரணைக்கு அழைத்தனர். இந்த விசாரணையின் போது தங்களை விட குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது தெரிய வந்ததாக கூறி, அந்தப் பணி நியமனங்களை செல்லாது என அறிவிக்க வேண்டுமென விண்ணப்பதாரர்கள் பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம், மனுதாரர்களின் கோரிக்கையை எட்டு வாரங்களுக்குள் மீண்டும் பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்கும்படி, மாநகரப் போக்குவரத்து கழகத்துக்கும், தமிழக அரசுக்கும் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்குகள் நீதிபதிகள் ஆர் சுப்பிரமணியன் மற்றும் ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், நியமனம் செய்யப்பட்ட 33 இளநிலை பொறியாளர்களில் நான்கு பேர் மட்டுமே முறையான தகுதி பெற்றவர்கள் என்றும் பல விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்கள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் இட ஒதுக்கீட்டு நடைமுறை பின்பற்றப்படவில்லை என்றும் வாதிடப்பட்டது.

அரசு தரப்பில் மனுதாரர்களின் கோரிக்கையை அரசு பரிசீலிக்கும் என்ற போதிலும் மொத்தமாக 33 இளநிலை பொறியாளர்களின் நியமனத்திற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய இது பொதுநல வழக்கல்ல என்றும் தெரிவிக்கப்பட்டது.

நியமனம் பெற்ற விண்ணப்பதாரர்கள் தரப்பில், நிலுவையில் உள்ள குற்ற வழக்கு முடிவுக்கு வரும் வரை இந்த மேல்முறையீட்டு வழக்கின் விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்றும் இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்பட்டு நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் வழக்கு தொடர்ந்து உள்ள ஐந்து பேருக்காக 33 பேரை ஏன் பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.

வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்தது அடுத்து, நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.