தமிழ்நாடு

குமரி அனந்தன் மறைவு: மகிழ்ச்சியோடு போய் வாருங்கள் அப்பா.. தமிழிசை சௌந்தரராஜன் உருக்கம்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவரான தமிழிசையின் தந்தை குமரி அனந்தன் (வயது 93) இன்று அதிகாலை வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். குமரி அனந்தனின் உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது மகள் தமிழிசை சௌந்தரராஜன் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ள நிலையில், தந்தையின் உடலை பார்த்து தமிழிசை கதறி அழுத காட்சிகள் காண்பேரை கலங்கச் செய்தது.

 குமரி அனந்தன் மறைவு: மகிழ்ச்சியோடு போய் வாருங்கள் அப்பா.. தமிழிசை சௌந்தரராஜன் உருக்கம்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவரும், தமிழிசை சௌந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் இன்று (மார்.9) காலமானார். மருத்துவமனையில் சிறுநீரக பிரச்சினைக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நள்ளிரவு உயிரிழந்தார். இவர் 4 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.

தந்தைக்கு கண்ணீர்மல்க இரங்கல்

தமிழ் கற்றதனால் நான் தமிழ் பேசவில்லை. தமிழ் என்னைப் பெற்றதனால் நான் தமிழ் பேசுகிறேன் என்று பெருமையாக பேச வைத்த என் தந்தை குமரி அனந்தன் இன்று என் அம்மாவோடு இரண்டர கலந்து விட்டார். குமரியில், ஒரு கிராமத்தில் பிறந்து, தன் முழு முயற்சியினால் அப்பழுக்கற்ற அரசியல்வாதியாக தமிழ் மீது தீராத பற்று கொண்டு தமிழிசை என்ற பெயர் வைத்து, இசை இசை.. என்று கூப்பிடும் என் அப்பாவின் கணீர் குரல் இன்று காற்றில், இசையோடு கலந்து விட்டது.

தமிழோடு காற்றில் கலந்துவிட்டார்

வாழ்க்கை இப்படித்தான் வாழ வேண்டும் என்று சீரான வாழ்க்கை வாழ்ந்தவர். இன்று தான் வளர்த்தவர்கள் எல்லாம் சீராக வாழ்வதைக் கண்டு, பெருமைப்பட்டு வாழ்த்திவிட்டு எங்களை விட்டு மறைந்திருக்கிறார். என்றும், அவர் பெயர் நிலைத்திருக்கும். தமிழக அரசியலில், பாராளுமன்றத்தில் முதன் முதலில் தமிழில் பேசியவர் இன்று தமிழோடு காற்றில் கலந்துவிட்டார் என்று சொல்ல வேண்டும். மகிழ்ச்சியோடு போய் வாருங்கள் அப்பா. நீங்கள் மக்களுக்கு என்ன எல்லாம் செய்ய வேண்டும் என்று நினைத்தீர்களோ, அதை மனதில் கொண்டு, உங்கள் பெயரில் நாங்கள் செய்வோம் என்று உறுதியோடு உங்களை வழி அனுப்புகிறோம்.

உங்கள் வழி உங்கள் வழியில் நீங்கள் எப்பொழுதும் சொல்வதைப் போல நாமும் மகிழ்ச்சியாக இருந்து, மற்றவர்களை மகிழ்விக்க வேண்டும் என்று உங்கள் ஆசையை எப்போதும் நிறைவேற்றுவோம். போய் வாருங்கள் அப்பா தமிழ் கற்றதனால் நான் தமிழ் பேசவில்லை தமிழ் என்னைப் பெற்றதனால் நான் தமிழ் பேசுகிறேன் என்றும், நன்றி அப்பா, மகிழ்ச்சியோடு போய் வாருங்கள் தமிழிசை செளந்தரராஜன் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.