தமிழ்நாடு

குரூப் 2 தேர்வு: 5.53 லட்சம் பேர் எழுத உள்ளனர் - TNPSC முக்கிய அறிவுறுத்தல்!

செப். 28 அன்று நடைபெறவுள்ள TNPSC குரூப் 2 தேர்வை 5.53 லட்சம் பேர் எழுத உள்ளனர். தேர்வர்கள் காலை 09:00 மணிக்கு மேல் தேர்வறைக்குள் நுழைய அனுமதியில்லை என TNPSC திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

குரூப் 2 தேர்வு: 5.53 லட்சம் பேர் எழுத உள்ளனர் - TNPSC முக்கிய அறிவுறுத்தல்!
குரூப் 2 தேர்வு: 5.53 லட்சம் பேர் எழுத உள்ளனர் - TNPSC முக்கிய அறிவுறுத்தல்!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வாயிலாக நேரடி நியமனத்திற்கான ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – II (குரூப்-II மற்றும் IIA) வரும் செப்டம்பர் 28, 2025 அன்று முற்பகலில் நடைபெற உள்ளது. இத்தேர்வை எழுத உள்ள தேர்வர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் தேர்வறைக்குள் இருக்க வேண்டும் என TNPSC அறிவுறுத்தியுள்ளது.

தேர்வர்கள் விவரம்:

இத்தேர்வினை, பொதுத் தமிழை விருப்பப் பாடமாகத் தேர்ந்தெடுத்த 4,47,421 பேரும், பொது ஆங்கிலத்தை விருப்பப் பாடமாகத் தேர்ந்தெடுத்த 1,06,213 பேரும் என மொத்தம் **5,53,634 தேர்வர்கள் எழுத உள்ளனர். இவர்களுக்காகத் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 1,905 தேர்வுக் கூடங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

TNPSC-யின் முக்கிய ஏற்பாடுகள்:

தேர்வுக்காக அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும், மாவட்ட வருவாய் அலுவலர்கள் இணை ஒருங்கிணைப்பாளராகவும் செயல்படுவார்கள். துணை ஆட்சியர் நிலையில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

மொத்தமுள்ள 1,905 தேர்வுக் கூடங்களுக்கும் முதன்மை கண்காணிப்பாளர்கள் மற்றும் அறைக் கண்காணிப்பாளர்கள் (20 தேர்வர்களுக்கு ஒருவர்) நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு நடைபெறும் நாளின் அனைத்து நடவடிக்கைகளும் வீடியோ பதிவு (Videograph) செய்ய உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தேர்வர்கள் எளிதில் சென்றுவர ஏதுவாகப் போக்குவரத்துத் துறை மூலம் சிறப்புப் பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பிற்காக அனைத்துத் தேர்வுக் கூடங்களுக்கும் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தடையில்லா மின்சாரம் வழங்க மின்வாரியத் துறைக்கும், மருத்துவ உதவிகள் வழங்கச் சுகாதாரத் துறைக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேர்வர்களுக்கான அறிவுறுத்தல்:

விண்ணப்பதாரர்கள், தேர்வு நடைபெறும் நாளான செப்டம்பர் 28, 2025 முற்பகல் 09:00 மணிக்கு முன்னரே தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வுக் கூடத்திற்குச் செல்ல வேண்டும். 09:00 மணிக்கு மேல் வரும் தேர்வர்கள் தேர்வுக் கூடத்தில் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனத் தேர்வாணையம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

மேலும், தேர்வர்கள் தங்கள்தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினை கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டும் என்றும், தேர்வாணையத்தால் தடை செய்யப்பட்ட மின்னணுச் சாதனங்கள் மற்றும் வேறு எந்த ஒரு சாதனத்தையும் தேர்வுக் கூடத்திற்குள் கொண்டு வரக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.