தமிழ்நாடு

விவசாய தண்ணீருக்கு வரி விதிக்க திட்டம்.. கொதிக்கும் தமிழக விவசாயிகள்

மத்திய அரசின் ஜல் சக்தி துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டில், விவசாயிகள் பயன்படுத்தும் தண்ணீருக்கு வரி விதிக்கப்படும் என குறிப்பிட்டுள்ள நிலையில் விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

விவசாய தண்ணீருக்கு வரி விதிக்க திட்டம்.. கொதிக்கும் தமிழக விவசாயிகள்
Farmers Strongly Oppose Central Government's Plan for Water Usage Tax
மத்திய அரசின் ஜல் சக்தி துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விவசாயிகள் பயன்படுத்தும் தண்ணீருக்கு வரி விதிக்கப்படும் எனவும், அப்பொழுதுதான் விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவார்கள் எனவும், இது குறித்து மாநில அரசுகளுடன் இணைந்து 22 திட்டங்களை செயல்படுத்த திட்டம் வகுத்துள்ளதாகவும்” குறிப்பிட்டுள்ளார். இதற்கு விவசாயிகள் மத்தியில் கடும் ஆட்சேபனை எழுந்துள்ளது.

இதுத்தொடர்பாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ள விவரங்கள் பின்வருமாறு-

”கடந்த 2012 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இதுபோன்ற அறிவிப்பு வந்தபோது நாடு முழுவதும் எழுந்த கண்டனங்களின் அடிப்படையில் அந்த முயற்சி கைவிடப்பட்டது. உலக வர்த்தக கழகத்தோடு இந்தியா செய்துள்ள ஒப்பந்தப்படி தண்ணீரை ஒரு வணிகப் பண்டகமாக மட்டுமே அரசுகள் அணுக வேண்டும் என்கிற ஒப்பந்தத்தின் அடிப்படையில் தற்போது அனைத்து மக்களுக்கும் குடிநீர் கட்டணம் செலுத்தி பெற வேண்டிய சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளதுடன், நாம் பெறும் நீரை அளந்து அதன் அடிப்படையில் அளவில் கட்டணம் விதிப்பதற்காக இந்தியா முழுவதும் ஜல் ஜீவன் திட்டம் கொண்டுவரப்பட்டு, அந்தத் திட்டத்தின் அனைத்து செயல்பாடுகளும் தனியார் பெரு நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதுபோல விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் ஆற்று நீர், நிலத்தடி நீர் ஆகிய இரண்டிற்கும் வரி விதிக்கும் முயற்சியில் நீண்ட காலமாக மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இந்தியாவில் விவசாயிகளின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ள காரணத்தால் இந்த முயற்சி ஒவ்வொரு முறையும் முறியடிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர் இது போன்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளதற்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்”.

வாக்குறுதியை நிறைவேற்றாத பிரதமர்:

”இந்தியாவில் விவசாயம் தொடர்ச்சியான நஷ்டத்தில் இருக்கும் வகையில் மத்திய - மாநில அரசுகளின் கொள்கைகள், திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. பெற்ற கடனையும் விவசாயிகளால் செலுத்த முடியவில்லை. ஆனால் இன்னொரு புறம் கடந்த 12 ஆண்டுகளில் 16.35 லட்சம் கோடி பெரு நிறுவனங்களுக்கு மட்டுமே கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நஷ்டத்தில் இருக்கும் விவசாயிகளுக்கு ஒரு பைசா கூட மத்திய அரசு கடன் தள்ளுபடி செய்யவில்லை. விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு லாபகரமான விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்வேன் என்று தான் அளித்த வாக்குறுதியையும் பிரதமர் மோடி அவர்கள் நிறைவேற்றவில்லை.

விவசாயிகளே விவசாயத்தை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலையை உருவாக்கி, விவசாயத்தை பெரு நிறுவனங்களிடம் ஒப்படைத்து, அதன் மூலமாக 140 கோடி மக்களின் உணவு பொருட்களை பங்குச் சந்தையில் பட்டியலிட்டு சூதாடுவதற்கும், மக்களை அதிக அளவில் சுரண்டுவதற்கும் மட்டுமே திட்டமிட்டு வருகிறார்கள். எனவே உடனடியாக பிரதமர் மோடி அவர்கள் இதில் தலையிட்டு இந்த அறிவிப்பை திரும்ப பெற உத்தரவிட வேண்டுமென தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.