தமிழ்நாடு

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: இருப்பவர்களுக்கு நீதி செய்வதே அறமாகும்- கவிஞர் வைரமுத்து

ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்திற்கு கவிஞர் வைரமுத்து கோரிக்கை விடுத்துள்ளார்.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: இருப்பவர்களுக்கு நீதி செய்வதே அறமாகும்- கவிஞர் வைரமுத்து
Vairamuthu
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் குறித்து, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் அமைக்கப்பட்ட ஒருநபர் ஆணையத்திடம் கவிஞர் வைரமுத்து ஒரு முக்கியக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

வைரமுத்து வேண்டுகோள்

இதுகுறித்து அவர் தனது 'எக்ஸ்' பக்கத்தில்வெளியிட்டுள்ள பதிவில், "கரூர் சம்பவம் குறித்து அரசு அமைத்திருக்கும் தனிநபர் ஆணையத்தின் தலைவர் நீதிபதி அருணா ஜெகதீசன் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள். உயிரிழப்புக்கு ஆளான 41 குடும்பங்களிலும் நீங்கள் ஆய்வு மேற்கொண்டிருப்பீர்கள்.

இறந்தவர்களுக்கு நியாயமும் இருப்பவர்களுக்கு நீதியும்

அந்தக் குடும்பங்களில் வேலை வாய்ப்புக்கு வயதுடையவர்களையும் கல்வி கற்கும் வாய்ப்புடையவர்களையும் அரசுக்கு நீங்கள் அறிக்கையில் குறித்து அறிவிக்க வேண்டும். பலியானோர் பலரும் அடித்தட்டு மற்றும் நடுத்தட்டு வர்க்கத்து நலிந்தவர்கள்தாம். வேலைவாய்ப்பும் கல்வியுமே அவர்களின் மாபெரும் துயரத்துக்கு மருந்தாக முடியும். இறந்தவர்களுக்கு நியாயம் செய்வதும் இருப்பவர்களுக்கு நீதிசெய்வதுமே அறமாகும்.

இந்தப் பணியை நீங்கள் இப்போதே முடித்திருந்தால் அது சமூக தர்மமாகும். உங்கள் அறிக்கை, பட்டழிந்தோர் கண்ணீரைத் தொட்டுத் துடைக்கும் சுட்டு விரலாகட்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.