அரசியல்

போகாத ஊருக்கு முதலமைச்சர் வழி சொல்கிறார்.. நயினார் நாகேந்திரன் விமர்சனம்

அரசியல் ஆதாயத்திற்காக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவோம் என்று போகாத ஊருக்கு, வழி சொல்கிறார் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

போகாத ஊருக்கு முதலமைச்சர் வழி சொல்கிறார்.. நயினார் நாகேந்திரன் விமர்சனம்
Nainar nagendran and CM Stalin
மதுரையில் முருக பக்தர் மாநாடு நடைபெறுவதையொட்டி திண்டுக்கல் நத்தம் சாலையில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெறது. இந்த ஆலோசனைக் கூட்டம் பாஜக அலுவலகத்தில் நேற்று (ஜூன் 3) இரவு 8 மணிக்கு நடைபெற்றது. இதில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார்.
ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு, செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "பாஜக மாநிலத் தலைவராக பொறுப்பேற்ற பிறகு 3வது முறையாக மாவட்டம் மற்றும் மாநில நிர்வாகிகளை சந்தித்து வருகிறேன். இன்று காலை திருநெல்வேலி, விருதுநகர், மதுரை - மேலூர் நிர்வாகிகளை சந்தித்தேன். தற்போது திண்டுக்கல்லில் உங்களை சந்திக்கிறேன்" எனத் தெரிவித்தார்.

"ஆளுநர் பயந்து சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் கொடுத்துள்ளார்" என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், "முதல்வர் கூறியது தவறான கருத்து. மக்களின் புரிதலை மாற்றுகிறது. ஏனென்றால் முன்பு சட்டமன்றத்தில் கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆளுநர் ஏன் மறுப்பு தெரிவித்தார். அதற்கு நீட் தேர்வுக்கு உதாரணமாக ஒன்றை கூறுகிறேன். நீட் தேர்வு குறித்த அதிமுக காலத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டு ஆளுநர் ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டு நிராகரிப்பு செய்யப்பட்டது.

நடக்காத விஷயத்தை, நடைபெற முடியாத விஷயத்தை திரும்பவும் அரசியல் ஆதாயத்திற்காக முதலமைச்சர் நீட் தேர்வை விலக்கு பெறுவோம் என தேர்தல் வாக்குறுதியில் கூறினார். நீட் தேர்வு வராது என்று எல்லாருக்கும் தெரிந்தது. திமுக கொண்டு வந்தததுதான் நீட் தேர்வு. காங்கிரஸ் ஆட்சியில் திமுக அங்கம் வகித்தபோது நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது. இப்போது வேண்டாம் என்று தீர்மானம் கொண்டு வந்து போகாத ஊருக்கு முதலமைச்சர் வழி சொல்கிறார்" என்று கூறினார்.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, ஆளுநருக்கு தான் அதிகாரம் வேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தார். ஆனால், தற்போது உள்ள முதலமைச்சர் ஆளுநருக்கு அதிகாரம் வேண்டாம் தங்களுக்கு தான் அதிகாரம் வேண்டும் என கூறுகிறார். முன்னாள் முதலமைச்சருக்கும் இந்நாள் முதலமைச்சருக்கும் உள்ள பல்வேறு முரண்பாடுகள் உள்ளது. தமிழக மக்களுக்கு நன்மை செய்யக்கூடிய வகையில் எதுவுமில்லை என்று அவர் தெரிவித்தார்.

மத்திய அரசிடம் நிதி வாங்கி நன்மை செய்ய வேண்டும். ஒவ்வொரு காரியத்திலும் முதலமைச்சர் ஈடுபடுகிறாரா என்றால் இல்லை. மொழியை வைத்து அரசியல் செய்கிறார். இதற்கெல்லாம் ஒரு விடிவு காலம் வர வேண்டும். மக்களை ஏமாற்றுகின்ற அரசியல்வாதிகளை அரசியலில் இருந்து அகற்ற வேண்டும். நல்லவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும்" எனக் கூறினார்.

கன்னட மொழி குறித்த கமல்ஹாசனின் கருத்து சர்ச்சையான விவகாரம் குறித்த கேள்விக்கு, "அவரவர்களுக்கு அவரது தாய்மொழி முக்கியம். இதில் அவர்கள் பேசியது தவறு, இவர்கள் பேசியது என நான் கருத்து சொல்ல முடியாது. என்னைப் பொறுத்தவரை எனது தாய் மொழி பெரியது" எனக் கூறினார்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக அண்ணாமலை வெளியிட்ட வீடியோ குறித்து கேள்விக்கு, "அண்ணாமலை ஆதாரப்பூர்வமாக சில விஷயங்களை கூறியுள்ளார். அவர்களும் ஆதாரப்பூர்வமாக பதில் கூறினால் நன்றாக இருக்கும். என்னை பொருத்த வரை அதே பிரச்சனை தான். அதே கேள்வியை தான் நானும் கேட்கிறேன். காவல்துறை குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யும்போது சரியான முறையில் தாக்கல் செய்திருந்தால் அந்த சாருக்கும் விடை தெரிந்திருக்கும்.

துணை முதலமைச்சரின் ரசிகர் மன்றத்தை சேர்ந்த கவிதாஸ் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு என்ன ஆனது? என்று கேள்வி எழுப்பினார். அண்ணா நகரில் மனநலம் குன்றிய பெண்ணை ஒரு வருடமாக பத்து பேர் பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளனர். அந்த வழக்கு என்ன ஆனது? மேலும், 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக அளிக்கப்பட்டதாக மனு கொடுக்க போன பெற்றோர் மீது புகார் சொன்ன வழக்கு என்ன ஆனது? இதுபோன்று பல்வேறு பாலியல் வன்கொடுமை வழக்குகள் நிலுவையில் இருக்கும் போது, அண்ணா பல்கலைக்கழக வன்கொடுமை விவகாரத்தில் இவ்வளவு அவசரம் ஏன் எனக்கேள்வி எழுப்பிய அவர், ஏன் இந்த அவசரம் என்று மனசாட்சியுடன் சிந்தித்து பார்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.