அரசியல்

முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தலைவர் போட்டியில் நான் இல்லை- அண்ணாமலை

பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் அவமதிக்கும்படி நடந்து கொண்டுள்ளார் என்றும் அதற்கு முதல்வர், தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தலைவர் போட்டியில் நான் இல்லை- அண்ணாமலை
மு.க.ஸ்டாலின் -அண்ணாமலை

பிரதமர் நரேந்திர மோடி இன்று ராமேஸ்வரத்தில் புதிதாக கட்டப்பட்ட செங்குத்து ரயில் பாலத்தை திறந்து வைத்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இந்த விழாவில் பங்கேற்க சென்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்தார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, “11 ஆண்டுகளில் நமது பிரதமர் நான்கு முறை ராமேஸ்வரத்திற்கு வந்துள்ளார். 8300 கோடி ரூபாய் திட்டப்பணிகளை இன்று பிரதமர் அறிவித்துள்ளார். ராமநவமி நாட்களில் விரதத்தில் இருந்து வருகிறார் பிரதமர். ராமநவமி நாளான இன்று 580 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலத்தை திறந்து வைத்துள்ளார்.

நான்கு ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் நடைபெறக்கூடிய இந்த நிகழ்வில் முதல்வர் கலந்து கொள்ளவில்லை. அதற்காக முதல்வர் சொன்ன காரணம் ஏற்றுக்கொள்ள முடியாது. பிரதமரை வரவேற்க வேண்டியது நம்முடைய பிரதிநிதியாக உள்ள முதல்வரின் தலையாய கடமை. ஆனால் முதல்வர் வெயில் கொடுமையால் ஊட்டிக்கு சென்று விட்டார். பாஜக இதை வன்மையாக கண்டிக்கிறது.

தமிழக மக்களுக்காக பணி செய்ய வந்த பிரதமரை முதல்வர் அவமதிக்கும்படி நடந்து கொண்டுள்ளார். அதற்கு முதல்வர், தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று கூறினார்.

தொடர்ந்து, “ஊட்டியில் அமர்ந்து கொண்டு ராமேஸ்வரம் வரும் பிரதமர், தொகுதி மறுசீரமைப்பு குறித்து பேச வேண்டும் என கூறி வருகிறார். தொகுதி மறு சீரமைப்பு குறித்து தமிழக முதல்வர் தவறாக பேசி வருகிறார். இதை ஒரு காரணமாக வைத்து ஊட்டியில் ஒளிந்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இங்கு இருக்கக்கூடிய அமைச்சர்கள் ஆங்கிலத்தில் தான் கையெழுத்திடுகிறார்கள். மருத்துவ படிப்பு ஏன் தமிழில் கொடுக்கவில்லை என பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி பிரதமர் பேசியுள்ளார்” என்று தெரிவித்தார்.

வழக்கமாக பிரதமர் நிகழ்வுகளில் மேடையில் அமரும் பாஜக தலைவர் அண்ணாமலை இன்று மேடையில் இல்லாதது குறித்து கேள்வி எழுப்பியதற்கு, இன்று நடந்தது அரசு நிகழ்வு என்பதால் மேடைக்கு பின்புறம் இருந்தேன். கோயிலில் சாமி தரிசனம் செய்தேன். அரசு நிகழ்வுகளில் நான் மேடை ஏற முடியாது. அதனால் தான் மக்கள் பிரதிநிதியாக எல்.முருகன், நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டனர் என்றார்.

பிரதமர் திறந்து வைத்த பாலத்தில் கோளாறு ஏற்பட்டதாக இன்று செய்தி வந்தது குறித்த கேள்விக்கு, பிரதமர் திறந்து வைத்த பாலத்தில் ரயில் சென்றது. ஆனால் பாலம் பழுது ஏற்பட்டதாக செய்தி வருகிறது அது உண்மையாகவே நடந்ததா? இல்லை செய்தி தவறாக வந்துள்ளதா? என தெரியவில்லை.

எடப்பாடி பழனிச்சாமி, பாஜகவுடன் கூட்டணி வைக்க இயல்கிறார். நீட் தேர்வை ரத்து செய்தால்தான் பாஜகவுடன் கூட்டணி என தைரியமாக கூறுவாரா? என முதல்வர் பேசியது குறித்த கேள்விக்கு, காங்கிரஸ் கட்சி இவர்களை காலடியில் அழுத்தி தான் சீட்டு கொடுத்தது. இந்திரா காந்தியை திட்டியவர் கருணாநிதி. நீட் தேர்வு ரத்து செய்யும் ரகசியம் உள்ளதாக ஆட்சிக்கு வந்தீர்களே நான்கு ஆண்டுகளக அந்த ரகசியம் எங்கே உள்ளது. என்ன ரகசியம் என தெரிவிக்கவில்லை.

நீட் தேர்வு குறித்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஜனாதிபதியிடம் அனுப்பிய போது அது திருப்பி அனுப்பப்பட்டது. முடியாத காரணத்தினால் உப்புச் சப்பு இல்லாத காரணத்தை முன்வைத்து அடுத்தவர்கள் கூட்டணி குறித்து பேசுவது முதல்வர் வேலையில்லாமல் உள்ளார் என்பதை காட்டுகிறது.

அடுத்த தலைவர் அண்ணாமலை தான் என கூறி வருவதாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, நான் ஏற்கனவே பலமுறை கூறி விட்டேன் தலைவர் போட்டியில் நான் இல்லை. தலைவராக இருந்தபோது என்ன பணி செய்தேனோ அதே பணியை தொண்டனாக இருக்கும்போதும் தொடர்வேன் என தெரிவித்தார்.