சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய்யின் விலை நிலவரத்தை பொறுத்தே பெட்ரோல், டீசல் விலை மாறி வருகிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கடந்த சில தினங்களாக தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இந்நிலையில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை ஒரு லிட்டருக்கு தலா 2 ரூபாய் உயர்த்தியுள்ளது மத்திய அரசு.
மத்திய அரசு வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பின்படி, பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் மீதான கலால் வரி ஒவ்வொரு லிட்டருக்கும் 2 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. கலால் வரியானது, எரிபொருள் விலை நிர்ணயத்தில் முக்கிய காரணியாகும். அந்த வகையில், கலால் வரி உயர்த்தப்பட்டதால் பெட்ரோல், டீசல் விலை உயரப்போகிறதா? என வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். சமூக வலைத்தளங்களில் பொதுமக்கள் பலரும் புலம்பத் தொடங்கினர்.
மத்திய அரசு விளக்கம்
சமூக வலைதளப்பக்கத்தில் பொதுமக்கள் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, “மத்திய அரசு இன்று பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு தலா 2 ரூபாய் உயர்த்தியிருந்தாலும் பெட்ரோல் மற்றும் டீசலின் சில்லறை விலைகளில் எந்த மாற்றமும் இருக்காது. கலால் வரி உயர்வை எண்ணெய் நிறுவனங்களே (PSU Oil Marketing Companies) ஏற்றுக் கொள்ளும்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த கலால் வரி உயர்வானது நாளை முதல் அமலுக்கு வரும் என்று கூறப்படுகிறது. கலால் வரியானது மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் நிலையில் இந்த வரி உயர்வு தமிழ்நாடு உட்பட இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா
Excise duty on petrol: பெட்ரோல்-டீசல் மீதான கலால் வரி உயர்வு.. புலம்பும் மக்கள்
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை ஒரு லிட்டருக்கு தலா 2 ரூபாய் உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ள சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.