இந்தியா

பெங்களூருவில் 'டிஜிட்டல் கைது' நாடகம்: பெண் இன்ஜினீயரிடம் ரூ.32 கோடி மெகா மோசடி!

பெங்களுருவில் பெண் இன்ஜினீயரிடம் 'டிஜிட்டல் கைது' நாடகத்கி அரங்கேற்றி ரூ.32 கோடியை சுருட்டிய மோசடி கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பெங்களூருவில் 'டிஜிட்டல் கைது' நாடகம்: பெண் இன்ஜினீயரிடம் ரூ.32 கோடி மெகா மோசடி!
Bengaluru woman loses Rs 32 crore in digital arrest
பெங்களூருவில் உள்ள 57 வயது பெண் கம்ப்யூட்டர் இன்ஜினீயர் ஒருவரிடம், போலியான 'டிஜிட்டல் கைது' நாடகத்தை நடத்தி, ஆறு மாதங்களுக்கும் மேலாக மிரட்டி ரூ.31 கோடியே 83 லட்சத்தை மோசடிக் கும்பல் பறித்துள்ளது. இதுகுறித்து தற்போது போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மோசடி ஆரம்பித்த விதம்

பெங்களூரு, இந்திராநகரில் வசித்து வரும் 57 வயதுடைய அந்தப் பெண், ஒரு தனியார் நிறுவனத்தில் உயர் பதவியில் இருந்து வருகிறார். கடந்த 2024 செப்டம்பர் மாதம், மும்பையில் இருந்து DHL என்ற கூரியர் நிறுவனத்தில் இருந்து பேசுவதாகக் கூறி ஒரு மர்ம நபர் இவருக்கு அழைப்பு விடுத்துள்ளார். அவரது பெயரில் வந்த பார்சலில் கிரெடிட் கார்டுகள், பாஸ்போர்ட்டுகள் மற்றும் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் (MDMA) இருப்பதாகக் கூறி மிரட்டியுள்ளனர்.

சிபிஐ மற்றும் டிஜிட்டல் கைது நாடகம்

இதனை அந்த பெண் மறுத்தபோதும், அடுத்ததாக சி.பி.ஐ. அதிகாரிகள் என்று கூறி வேறு சிலர் மிரட்டத் தொடங்கினர். மர்மநபர்கள் அப்பெண்ணை 'டிஜிட்டல் கைது' செய்திருப்பதாகக் கூறி, சி.பி.ஐ. ரகசியமாகக் கண்காணிப்பதாகவும், இந்த விவகாரம் வெளியே தெரிந்தால் குடும்பத்தினரையும் வழக்கில் சிக்க வைப்போம் என்றும் மிரட்டினர். மகனின் திருமணம் வரவிருந்ததைக் கருதி பயந்துபோன அந்தப் பெண், அவர்கள் சொன்னதற்கெல்லாம் கட்டுப்பட்டுள்ளார்.

ரூ.31.83 கோடி பறிப்பு

கடந்தாண்டு செப்டம்பர் மாதம் முதல் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை, ஆறு மாதங்களுக்கும் மேலாக அந்தப் பெண்ணை மிரட்டி, மர்ம நபர்கள் மொத்தம் ரூ.31 கோடியே 83 லட்சத்தைப் பறித்துள்ளனர். அந்தப் பெண் தனது பணத்தை 187 தவணைகளாக, மர்மநபர்கள் கூறிய வங்கிக் கணக்குகளுக்குச் செலுத்தி உள்ளார். பணத்தை வழக்கு முடிந்த பிறகு திருப்பித் தந்துவிடுவதாக அவர்கள் உறுதியளித்திருந்தனர்.

மோசடி அம்பலமானது

முடிவில், அந்தப் பெண் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடவில்லை என்று ஒரு சான்றிதழையும் மர்மநபர்கள் அனுப்பி வைத்தனர். ஆனால், உறுதியளித்தபடி ரூ.31.83 லட்சத்தைத் திரும்பக் கொடுக்கவில்லை. அப்போது தான் தான் ஏமாற்றப்பட்டதை அந்தப் பெண் உணர்ந்தார். இதுகுறித்து அவர் கடந்த 14-ஆம் தேதி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் தற்போது வழக்குப் பதிவு செய்து மர்மநபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.