உலகம்

அமெரிக்க அதிபரின் திடீர் மாற்றம்.. இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட 25% வரி ஒத்திவைப்பு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா மீது விதித்த 25% இறக்குமதி வரி, ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும் என்று அறிவித்த நிலையில், தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபரின் திடீர் மாற்றம்.. இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட 25% வரி ஒத்திவைப்பு!
அமெரிக்க அதிபரின் திடீர் மாற்றம்.. இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட 25% வரி ஒத்திவைப்பு!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா மீது 25 சதவீத வரி விதிப்பை அறிவித்தார். இது இன்று முதல் அதாவது 2025, ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட இருந்தது. ஆனால், இப்போது அமெரிக்க அதிபர் இந்த முடிவை 7 நாட்களுக்கு ஒத்திவைத்துள்ளார். ஆனால், மீண்டும், வரும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரம்ப் இந்த வரி விதிப்பை அறிவித்தது முதல், இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யும் உற்பத்தியாளர்களிடமிருந்து, மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தியது. அமெரிக்காவின் முடிவைத் தொடர்ந்து, நம் நாட்டு தேசிய நலனுக்காகத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்திய அரசின் சார்பாக நாடாளுமன்றத்தில் வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் கூறுகையில், எந்த முடிவு எடுக்கப்பட்டாலும் அது தேசிய நலனுக்காகவே எடுக்கப்படும் என்றார். இதனுடன், வரி விவகாரம் தொடர்பாக இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகள் இன்னும் நடந்து வருவதாக டிரம்ப் உறுதிப்படுத்தினார். இந்தியாவின் இந்த அறிக்கைக்குப் பிறகுதான் அமெரிக்கா விதித்த வரி 1 வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்தியா விதிக்கும் வரிகள்குறித்து டிரம்ப் ஏற்கனவே தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். உலகிலேயே அதிக வரிகளை வசூலிக்கும் ஒரே நாடு இந்தியா என்று அவர் கூறியிருந்தார். தற்போது இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்து வரும் இந்தப் பேச்சுவார்த்தைகளில் இன்னும் இறுதி ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை.

ஒத்திவைப்பு விவரம் டொனால்ட் டிரம்ப் தனது இரண்டாவது பதவிக்காலத்தின் தொடக்கத்திலிருந்தே வரிகள் தொடர்பாக மிகவும் கடுமையான நிலைப்பாட்டை எடுத்து வருகிறார். இருப்பினும், இந்த முறை அவர் 92 நாடுகள்மீது ஒரே நேரத்தில் புதிய வரிகளை விதித்துள்ளார். இந்தியா மீதான வரி விதிப்பு என்பது இந்தியாவுக்கு மட்டுமே சிக்கலை ஏற்படுத்தாது, இந்த முடிவு அமெரிக்கர்களுக்குப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்படுக்கிறது.

யேல் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி அறிக்கை இதுகுறித்து கவலை தெரிவித்துள்ளது. இந்தியா மற்றும் தென் கொரியா போன்ற நட்பு நாடுகளுக்கு அதிக வரி விதிப்பது அமெரிக்கர்களுக்குப் பெரும் இழப்பை ஏற்படுத்தும் என்றும், இது உள்நாட்டு செலவுகளை அதிகரிக்கும் என்றும் பொருளாதார வளர்ச்சியை மெதுவாக்கும் என்றும் அறிக்கை எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியா மீதான வரி விதிப்பு, அமெரிக்காவின் பொருளாதாரத்தையும் பாதிக்கும் என யேல் பல்கலைக்கழக ஆய்வு எச்சரிக்கை விடுத்துள்ளது.