உலகம்

5 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா-சீனா நேரடி விமான சேவை மீண்டும் தொடக்கம்!

இந்தியா - சீனா இடையே கடந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு நேரடி விமான சேவை தொடங்கப்படவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

5 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா-சீனா நேரடி விமான சேவை மீண்டும் தொடக்கம்!
India-China direct flight service resumes after 5 years
இந்தியா - சீனா இடையே கடந்த 5 ஆண்டுகளாக நீடித்த பதற்றங்களுக்குப் பின்னர் முதல் முறையாக வரும் 26 ஆம் தேதி நேரடி விமான சேவை தொடங்கப்படவுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அக்டோபர் 26 முதல் இண்டிகோ சேவை

வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து, இண்டிகோ விமான நிறுவனம் அக்டோபர் 26, 2025 முதல் தனது விமானங்களை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளது. முதல் கட்டமாக, கொல்கத்தாவிலிருந்து குவாங்சூ நகருக்கு தினசரி, நேரடி விமானங்களை இண்டிகோ இயக்கும். இதைத் தொடர்ந்து, டெல்லி - குவாங்சூ இடையேயும் விரைவில் சேவை தொடங்கப்படும்.

விமானச் சேவை நிறுத்தம் ஏன்?

தோக்லாம் நெருக்கடி மற்றும் கல்வான் மோதலுக்குப் பிறகு நிறுத்தப்பட்டிருந்த விமானச் சேவைகள், பின்னர் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக மேலும் தாமதமாகின. தற்போது இரு நாட்டு உறவுகளும் சீரடைந்து வருவதால், விமான சேவைகளை மீண்டும் தொடங்குவது குறித்து தொழில்நுட்ப மட்டத்தில் பேச்சுகள் நடந்தன.

மத்திய அரசின் விளக்கம்

இரு நாடுகளின் விமான நிறுவனங்களின் வணிக முடிவுகள் மற்றும் அனைத்துச் செயல்பாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதைப் பொறுத்தே இது அமையும். இந்த உடன்பாடு, இரு நாடுகளுக்கும் இடையே மக்கள் தொடர்பு அதிகரிப்பதற்கும், இருதரப்புப் பரிமாற்றங்கள் படிப்படியாகச் சீராகுவதற்கும் உதவும். கடந்த மாதம் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி டெல்லிக்கு வந்த பிறகுதான் இந்த நேரடி விமானச் சேவை குறித்து முதன்முதலில் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உறவுகள் சீரமைப்பு

​​லைன் ஆஃப் ஆக்சுவல் கன்ட்ரோல் (LAC) பகுதியில் படைகள் விலக்கிக் கொள்ளும் செயல்முறை மற்றும் உயர்மட்ட இராணுவப் பேச்சுவார்த்தைகள் போன்ற நம்பிக்கை வளர்க்கும் நடவடிக்கைகளுக்குப் பிறகுதான், இந்த விமானச் சேவை தொடங்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.