தமிழ்நாடு

போர்த் தளபதி சீமான் – அண்ணாமலை புகழாரம்

போர் களத்தில் நிற்க கூடிய தளபதி தான் சீமான், தான் கொண்டக்கொள்கையில் உறுதி கொண்டவர் என அண்ணாமலை புகழ்ந்து பேசியுள்ளார்.

போர்த் தளபதி சீமான் – அண்ணாமலை புகழாரம்


சீமான் -அண்ணாமலை

செங்கல்பட்டு மாவட்டம், பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்துகொண்டிருப்பது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்னை வந்திருந்தார். சென்னையில் நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த அவரை சீமான் கடந்த 5ம் தேதி சந்தித்து பேசியதாக தகவல் வெளியானது. இதுகுறித்து பேசிய சீமான், ஊடகங்களில் வெளியாகிய தகவலில் உண்மை இல்லை என மறுத்தார். நாங்கள் தனித்து போட்டியிடுவதாக கூறி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்து வருகிறோம். மத்திய நிதியமைச்சரை சந்தித்திருந்தால், சந்தித்தேன் என நேரடியாக சொல்வேன் என சீமான் தெரிவித்துள்ளார்.

பெரிய வித்தியாசம் கிடையாது

இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டம், பொத்தேரியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் உள்ள தமிழ் பேராயகம் சார்பில் மாநில அளவிலான மாபெரும் பேச்சு போட்டியின் இறுதிச்சுற்று மற்றும் பரிசளிப்பு விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் கலந்து கொண்டனர். இருவரும் ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்றது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “போர் களத்தில் நிற்க கூடிய தளபதி தான் சீமான், தான் கொண்டக்கொள்கையில் உறுதி கொண்டவர். நான் தேசியத்தில் தமிழை பார்க்கிறேன். சீமான் தமிழில் தேசியத்தை பார்க்கிறார். எனக்கும், சீமானுக்கு பெரிய வித்தியாசம் கிடையாது. மேலும், நாங்கள் இருவரும் ஒன்றாக பங்கேற்கும் முதல் மேடை இது என தெரிவித்தார். இதேபோல் அண்ணாமலையை புகழ்ந்து சீமான் பேசினார்.