தமிழ்நாடு

மகளிருக்கான உரிமைத் தொகை- குட் நியூஸ் சொன்ன அமைச்சர்

தமிழகத்தில் ஜூலை 15 முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதி வாய்ந்த பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என வேடசந்தூரில் நடைப்பெற்ற நிகழ்வுக்கு பிந்தைய பத்திரிக்கையாளர் சந்திப்பில் உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

மகளிருக்கான உரிமைத் தொகை- குட் நியூஸ் சொன்ன அமைச்சர்
kalaignar magalir urimai thogai scheme
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்து 4 ஆண்டுகள் நிறைவாகியுள்ள நிலையில், திமுக அரசால் தொடங்கப்பட்ட ‘மகளிர் உரிமைத்தொகை’ திட்டமானது பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திட்டங்களுள் ஒன்றாகும். இன்னும் ஆயிரக்கணக்கான பெண்கள் மகளிர் உரிமைத் தொகை பெறாமல் இருக்கும் நிலையில், இதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை எழுந்து வந்தது.

இந்நிலையில், மகளிர் உரிமைத் தொகை தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்றினை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் புதிய மின் பகிர்மான கோட்ட அலுவலக திறப்பு விழா இன்று நடைபெற்றது.

இதில் உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தலைமை தாங்கி புதிய அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து அமைச்சர் சக்கரபாணி பேசுகையில், “வேடசந்தூர் மற்றும் குஜிலியம்பாறை தாலுகாவை சேர்ந்த விவசாயிகள் புதிய மின் இணைப்பு பெறுவதற்கு திண்டுக்கல் அலுவலகத்திற்கு செல்வதை தவிர்க்கும் பொருட்டும், விவசாயிகள் எளிமையாக மின் இணைப்பு பெறுவதற்காகவும் வேடசந்தூரில் புதிய மின் பகிர்மான கோட்டை அலுவலகம் துவங்கப்பட்டுள்ளது. தி.மு.க ஆட்சியில் 2 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது” என்றார்.

மேலும் கூறுகையில், “திமுக ஆட்சி அமைந்த பின்னர் தமிழ்நாடு முழுவதும் 20 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. வேடசந்தூர் பகுதியில் மட்டும் 47 புதிய ரேஷன் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 7 கடைகள் விரைவில் திறக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள பகுதி நேர ரேஷன் கடைகளை முழுநேர கடையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உறுதி அளித்தார்.

மேலும் ”ஜூலை 15 முதல் மகளிர் உரிமைத் தொகை பெறாத பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு, தகுதி வாய்ந்த அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை வழங்க ஏற்பாடு செய்யப்படும்” என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் வேடசந்தூர் எம்.எல்.ஏ காந்தி ராஜன், மின்சாரத்துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளர் கீதா, வேடசந்தூர் உதவி செயற் பொறியாளர் முத்துப்பாண்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.