தமிழ்நாடு

உருவாகிறது 'மோன்தா' புயல்.. 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு!

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளதால், தமிழகம், புதுச்சேரியில் உள்ள 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

உருவாகிறது 'மோன்தா' புயல்.. 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு!
warning issued in 9 ports
வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி இன்று காலை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதைத் தொடர்ந்து, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒன்பது துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

தாழ்வு மண்டலத்தின் நிலை மற்றும் நகர்வு

தற்போது வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், சென்னையில் இருந்து சுமார் 990 கிலோ மீட்டர் தொலைவில் கிழக்கு-தென் கிழக்கில் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும், அதன்பிறகு அக்டோபர் 27-ஆம் தேதி புயலாக வலுப்பெறும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் உருவாகும் இந்தப் புயலுக்கு 'மோன்தா' என்று பெயரிடப்பட்டுள்ளது.

துறைமுகங்களில் எச்சரிக்கை

புயல் சின்னம் காரணமாகக் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தமிழகத்தில் உள்ள ஒன்பது துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் 1ஆம் எண் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

எச்சரிக்கை விளக்கம்

1ஆம் எண் எச்சரிக்கை கூண்டு: புயல் உருவாகும் சாத்தியக்கூறு உள்ளது என்று இது குறிக்கிறது. பலத்த காற்று வீசக்கூடும், ஆனால் துறைமுகங்களுக்கு உடனடியாக ஆபத்து இருக்காது. இந்த எச்சரிக்கை பொதுவாக மணிக்குச் சுமார் 60 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதைக் குறிக்கும்.

மழை வாய்ப்பு: இந்தப் புயல் சின்னம் தென் மேற்கு - மத்திய மேற்கு வங்கக் கடலில் உருவாகி, ஆந்திராவை நோக்கி நகர்ந்தாலும், வட தமிழக மாவட்டங்களில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

புயல் சின்னம் காரணமாக மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.